![]() |
| அ . மீனாட்சி சுந்தரம் |
கடிநெல்வயல் அ. மீனாட்சி சுந்தரம் அவர்களின் வாழ்க்கை வரலாறு
முகவுரை.
என்னுடைய தாயாரின் சொந்த அக்காள் (தமக்கை) மகனும் தந்தையின் பெரியப்பா பெயரனும், கடிநெல்வயல் கீழக்காட்டில் பிறந்து வளர்ந்து, வாழ்ந்தவருமான அண்ணன் அ.மீனாட்சி சுந்தரத்தின் வாழ்க்கை வரலாறு இன்று இணையத்தில் பதிவேற்றப்படுகிறது. வலைப்பூ (BLOG) எனப்படும் இந்த இணையப் பதிவேற்றம் ஆயிரம் ஆண்டுகளானாலும் அழியாதது; யாராலும் அழிக்கவோ, திருத்தம் செய்யவோ, எதையும் புதிதாகக் கூட்டவோ அல்லது குறைக்கவோ முடியாதது. இந்தப் பக்கத்தைத் திறந்து பார்க்க https://thamizhnatpu.blogspot.com என்று உள்ளீடு (TYPE) செய்து "தேடுக" (SEARCH) என்பதைச் சொடுக்கினால் ஐந்தாறு வரிகள் உங்கள் முன் ஓடிவந்து நிற்கும். அதிலிருந்து "தமிழ் நட்பு" என்று காணப்படும் வரியைச் சொடுக்குங்கள். அவ்வளவுதான் ! "தமிழ் நட்பு வலைப்பூப் பக்கம் " திறந்து கொள்ளும். அடுத்து நீங்கள் விரும்பும் ஆளிநரின் வாழ்க்கை வரலாற்றைப் படிக்கத் தொடங்கலாம் !
பஞ்சநதிக் குளத்தார் புரம்
என்னும் கொடி !
நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரணியம்
வட்டம், 123, வருவாய் ஊரகம் கடிநெல்வயல் என்னும் ஊரில் கீழக்காடு பஞ்சநதிக் குளத்தார்
புரத்தைச் சேர்ந்தவர் நல்லபொதிய தேவர். இவரது மகன்கள் திரு சீனிவாச தேவர் மற்றும்
திரு சிங்காருத் தேவர். திரு.சீனிவாச தேவர் நீலாம்பாள் என்னும் மங்கையை
மணந்துகொண்டார். திரு சீனிவாச தேவருக்கு மூன்று பிள்ளைகள். மூத்தவர்
திரு அருணாச்சல தேவர்; இளையவர் திரு.சாம்பசிவ தேவர்; கடைசிப் பிள்ளை திரு சண்முகவேல்
தேவர் ! இந்தக் கொடியில் திரு அருணாச்சல தேவருக்கு மகனாகப் பிறந்த மலரே திரு
மீனாட்சி சுந்தரம்
!
(கடிநெல்வயல் முன்பு தஞ்சாவூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி வட்டத்தில் ஒரு சிற்றூராகத் திகழ்ந்து வந்தது!)
தோற்றம்:
நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரணியம்
வட்டம், கடிநெல்வயல் என்னும் சிற்றூரில் 1927 –ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம், 10 ஆம் நாள் (10-04-1927) பிறந்தவர் திரு.மீனாட்சி
சுந்தரம். இவரது தந்தையார் பெயர் சீ.அருணாச்சல தேவர். தாயார்
மீனாட்சியம்மை. பிறந்து 18 நாளிலேயே, (28-04-1927) தாயாரைப்
பறிகொடுத்த திரு. மீனாட்சிசுந்தரம், தனது தாய்வழிப் பாட்டி மற்றும் தாய்வழிச் சிற்றன்னையின் அரவணைப்பில்
வளர்ந்து வந்தார் !
தொடக்கக் கல்வி:
தனது பிறந்த ஊரான கடிநெல்வயலில் இயங்கிவந்த தொடக்கப் பள்ளியில் 1933 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம்
விசயதசமியன்று ஒன்றாம் வகுப்பில் திரு.மீனாட்சிசுந்தரம்
சேர்க்கப்பட்டார். இளமையிலேயே படிப்பில் மிகுந்த ஆர்வம் காட்டி வந்த திரு.மீனாட்சிசுந்தரம், ஐந்தாம் வகுப்பு வரை அப்பள்ளியிலேயே பயின்றார் !
பள்ளிக் கல்வி:
கடிநெல்வயலிலிருந்து எட்டு கி.மீ
தொலைவில் உள்ள ஆயக்காரன்புலத்தில் இயங்கி வந்த இரா. நடேச தேவர் அரசு
உயர்நிலைப் பள்ளியில் 1938 ஆம் ஆண்டு சூன் மாதம் 6 –ஆம் வகுப்பில் சேர்ந்தார். 7 –ஆம் வகுப்பு வரை அங்கேயே படித்து வந்த திரு. மீனாட்சி
சுந்தரம், தனது 8 –ஆம் வகுப்புப் படிப்பை (1940) திருத்துறைப் பூண்டி கழக
உயர்நிலைப் பள்ளியில் தொடந்தார். கடுமையான உணவுத் தட்டுப்பாடு தமிழ்நாட்டில் நிலவி வந்த அந்தக் காலச்
சூழ்நிலையானது பள்ளிப் பிள்ளைகளுக்கு மிகவும் இன்னல் விளைவித்துப் படிப்பைப்
பாதியில் நிறுத்தச் செய்துவந்தது. அந்தச் சூழ்நிலையிலும் கூட , விடாமுயற்சியுடன்
தனது படிப்பைத் தொடர்ந்த அவர், 11 ஆம் வகுப்பு (OLD
S.S.L.C) வரை அங்கேயே படித்து, தனது பள்ளிக் கல்வியை 1943 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நிறைவு செய்தார் !
ஆசிரியர் பயிற்சி:
பள்ளி இறுதி வகுப்பு வரைப் படித்திருந்த இவர், ஆசிரியப் பணியை விரும்பி, அதற்கான
முயற்சிகளில் ஈடுபடலானார். இடைநிலை ஆசிரியர் (SECONDARY
GRADE TEACHER) பயிற்சிக்கு விண்ணப்பித்திருந்த இவருக்கு, தஞ்சை
இடைநிலை ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் (SECONDARY GRADE TEACHER TRAINING SCHOOL) இடம்
கிடைத்து 1943 ஆம் ஆண்டு சூன் மாதம் பயிற்சியில் சேர்ந்தார். போக்குவரத்து வசதிகள் மிகவும்
குறைவாகவே இருந்த அந்தக் காலத்தில், 130 கி.மீ
தொலைவுக்கு அப்பால் உள்ள முற்றிலும் அறிமுகமில்லா ஊரில் இரண்டு
ஆண்டுகள் தங்கிப் பயிற்சிப் பெற வேண்டிய சூழ்நிலை நிலவியது. எனினும், தனது மன
உறுதியால் எதிர்கொண்ட இன்னல்களை எல்லாம் வென்று, வெற்றிகரமாகப்
பயிற்சியை முடித்து ஊர் திரும்பினார் !
ஆசிரியராகப் பணி ஏற்பு:
பயிற்சி முடித்த பின் 1947 -ஆம் ஆண்டு தான் படித்த திருத்துறைப் பூண்டி
அரசு உயர்நிலைப் பள்ளியிலேயே இவருக்கு இடைநிலை ஆசிரியர் பணி வாய்ப்புக் கிடைத்தது. பிறந்த
ஊரில் தந்தையும், தம்பி ஒருவரும் தனியாக வாழ்ந்து வந்த அந்தச் சூழலிலும், திருத்துறைப்
பூண்டியில் ஆசிரியப் பணியை ஏற்றுக் கொண்டார் !
திருமணம்:
பிறந்த 18 -ஆம் நாளிலேயே தன் தாயாரை இவர்
இழந்தமையால், இவரது தகப்பனார் இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். இதன்
விளைவாகத் தன் தாயின் தங்கையே இவருக்குச் சிற்றன்னையாக அமைந்தார்.
சிற்றன்னையாரும் 19 ஆண்டுகள் கழித்து, ஒரு ஆண் மகவைத்
தந்து விட்டு (21-06-1946) 1947 ஆம்
ஆண்டு, நவம்பர் மாதம் (00-11-1947) இறந்து போனார். இவரும், இவரது தம்பி சீனிவாசன் என்பவரும் தாயில்லாப் பிள்ளைகளாக வாழ வேண்டிய
துன்பச் சூழ்நிலை நிலவியதால், உறவினர்களின் வலியுறுத்தலால் இவர் திருமணம் செய்து கொள்ள இசைய வேண்டியதாயிற்று !
வேதாரணியம் வட்டத்தில் உள்ள தகட்டூர் என்னும் ஊரின் ஒரு பகுதியான கல்யாணச்சேரி
இராசகோபால் தேவர் – அரங்கம்மாள் இணையரின் ஒரே மகளான பார்வதி என்னும் மங்கையை இவர் 1948 ஆம் ஆண்டு, தனது 21 –ஆம் அகவையில் மணந்துகொண்டார் ! இவர் தனது
ஒரே மைத்துனரான சிவநேசன் என்பவரையும் சில ஆண்டுகளியே இழக்க நேர்ந்தது, பட்ட
காலிலேயே படும் என்னும் பழமொழியை நினைவு படுத்துவதாக அமைந்திருந்தது !
குடும்பம்:
திரு.மீனாட்சி சுந்தரம் – பார்வதி அம்மையார் இணையருக்கு கோவிந்தராசு, இராசேர்திரன், அருட்செல்வன்
ஆகிய மூன்று ஆண் மகவினரும், விசயலட்சுமி, வசந்த
கோகிலம், செந்தமிழ்ச்செல்வி, இந்திராணி, பத்மசுந்தரி ஆகிய ஐந்து பெண் மகவினரும் உள்ளனர். இந்த
எண்மருள் அறுவர் தாத்தா, பாட்டிகளாக வாழ்வில் உயர்வடைந்து விட்டனர் என்பது மகிழ்ச்சிக் குரிய செய்தி !
பிள்ளை / பெண்களின் திருமணம்:
திரு மீனாட்சி சுந்தரம் அவர்களின் மூத்த பெண் செல்வி விசயலட்சுமி மாங்குடி
திரு. இராசகோபால் அவர்களின் மகன் தங்கராசுவை 1970 -ஆம் ஆண்டு சூன் மாதம். 18 -ஆம்
நாள் (18-06-1970) அன்று மணந்தார். அதே நாளில்
(18-06-1970) அவரது இரண்டாவது பெண் செல்வி வசந்த
கோகிலம், ஆயக்காரன்புலம் 2-ஆம் சேத்தி, செட்டியார்
குத்தகை திரு சீனிவாச தேவர் மகன் பசுபதியை மணந்தார். இவர்கள் திருமணம் வேதாரணியத்தில்
நடைபெற்றது.
மூன்றாவது பெண் செல்வி செந்தமிழ்ச் செல்வி, மன்னார்குடி திரு ஆறுமுக தேவர் மகன் இராசேந்திரனை 1978 -ஆம் ஆண்டு, மே மாதம், 19 -ஆம் நாள் (19-05-1978) மணந்தார். அதே நாளில் (19-05-1978) திரு மீனாட்சி சுந்தரம் அவர்களின் மூத்த மகன் கோவிந்தராசு, சங்கேந்தி திரு பொ.சொக்கலிங்கம் பிள்ளையின் மகள் இரேவதியை மணந்து கொண்டார். இவர்கள் திருமணம் கடிநெல்வயலில் நடந்தது.
நான்காவது பெண் செல்வி இந்திராணி, சங்கேந்தி பொ.சொக்கலிங்கம் பிள்ளையின் மகன்
குணசேகரனை 1986 -ஆம் ஆண்டு, பிரவரி மாதம்,
10 ஆம் நாள் (10-02-1986) மணந்தார். இவர்கள் திருமணமும்
கடிநெல்வயலில் நடைபெற்றது.
இரண்டாவது மகன் இராசேந்திரன், வாய்மேடு மு.இராமசாமித் தேவர் – வசந்த கோகிலம்
இணையரின் மூன்றாவது மகள் கற்பகத்தை 1991-ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம், 8-ஆம் நாள் (08-09-1991) மணந்துகொண்டார். இவர்கள் திருமணம் திருத்துறைப்பூண்டி, பெரிய கோயில்
மங்களநாயகி திருமண மண்டபத்தில் நடைபெற்றது !
ஐந்தாவது பெண் பத்மசுந்தரி திருத்துறைப்பூண்டி வட்டம், வடமழை திரு சுப்பிரமணிய தேவர் - சீதாலாட்சுமி இணையரின் மகன் திரு.முருகேசனை மணந்தார். இவர்கள் திருமணம் 1991-ஆம் ஆண்டு, சூலை மாதம், 07-ஆம் நாள் (07-07-1991) அன்று, ஆயக்காரன்புலம், காசி வீரம்மாள் திருமண மண்டபத்தில் நடைபெற்றது !
மூன்றாவது மகன் அருட்செல்வன், தென்னடார் விசுவநாத தேவர் – மங்களம் அம்மையார்
இணையரின் மகள் செல்வி புவனேசுவரியை மணந்து கொண்டார். இவர்கள் திருமணம் 1995 -ஆம் ஆண்டு,
சூலை மாதம், 3-ஆம் நாள் (03-07-1995) ஆயக்காரன்புலம்,
காசி வீரம்மாள் திருமண மண்டபத்தில் நடைபெற்றது !
தந்தை மறைவு:
திரு மீனாட்சி சுந்தரம் அவர்களின் தந்தை திரு சீ.அருணாச்சல தேவர் அவர்கள்
1974 -ஆம் ஆண்டு, ஏப்பிரல் மாதம்,18-ஆம் நாள் (18-04-1974)
அகவை முதிர்வின் காரணமாக இயற்கை எய்தினார் !
பணியிட மாறுதல்கள்:
திருத்துறைப்பூண்டியில் தனது
ஆசிரியப் பணியை 1947 ஆம் ஆண்டு தொடங்கிய இவர், அன்றைய ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் இயங்கிவந்த பல பள்ளிகளிலும் தனது
கால் தடத்தைப் பதித்துக் கற்பிக்கும் பணியிலும் முத்திரை பதித்து வந்திருக்கிறார். தலைஞாயிறு ஆயக்காரன்புலம், வேதாரணியம், மகாதேவபட்டினம்
எனப் பல ஊர்களிலுமாக மொத்தம் 38 ஆண்டுகளை மாணாக்கர்களின் அறிவுக் கண்களைத் திறந்து
வைக்கும்
மேன்மையான பணியில் நல்கி தனது பணிக்குப் பெருமை சேர்த்திருக்கிறார் !
பணியிடைக்கால முத்திரைகள்:
வேதாரணியம் அரசு மேனிலைப் பள்ளியில் பணிபுரிகையில், அங்கு அரசு
ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் கூட்டுறவுச் சங்கத்தை ஏற்படுத்தி, நயப்பு
விலையில் மளிகைப் பொருள்கள் கிடைக்க ஏற்பாடு செய்தார். மாணவர்களுக்கான
பாடப் புத்தகங்கள், குறிப்பேடுகள், எழுதுபொருள்கள்
ஆகியவையும் நயப்பு விலையில் கிடைக்கப் பெற்றன ! பள்ளி
ஆண்டு விழா மற்றும் விளையாட்டுப் போட்டிகளை முன்னின்று நடத்துவதும், விழாவுக்கு
முதன்மை விருந்தினரை அழைத்து வந்து அவர்கள் மூலம் பள்ளி மேம்பாட்டுக்கான
ஆக்கச்சார்பான உதவிகள் கிடைக்கச் செய்வதிலும் முனைப்பாக ஈடுபட்டு
வந்தார் !
உருவாக்கிய சிற்பங்கள்:
இவர் தனது பணிக்காலத்தில் பல முதல்நிலை மாணாக்கர்களை உருவாக்கி இருக்கிறார். பிற்காலத்தில்
புகழ் பெற்ற மருத்துவர்களாகத் திகழ்ந்த சீனிவாசன், விநோதகன், இந்திரசித் ஆகியோர்
இவரது மாணவர்களே ! அரசியல்
வானில் ஒளிர்ந்த விண்மீன்களான வேதாரணியம் தொகுதி மேனாள் சட்ட மன்ற உறுப்பினர்களான
திரு.மா.மீனாட்சி சுந்தரம்,
திரு.மா.மாணிக்கம், திரு எஸ்.காமராசு, திரு.வேதரத்தினம் ஆகியோர் இவரது வார்ப்புகளே ! இக்கட்டுரையை
வடித்திருக்கும் தமிழ்ப்பணி மன்ற ஆட்சியரும், அவரது சிறிய
தந்தை மகனுமாகிய வேதரெத்தினம் எனும் நானும் அவருடைய வார்ப்புதான் என்று சொல்லிக்
கொள்வதில் மிகவும் பெருமை அடைகிறேன் !
பொதுப்பணி:
உள்ளூரில் இருக்கும் சிவன் கோயில், மாரியம்மன்
கோயில், வேம்படி ஐயனார் கோயில் ஆகிய கோயில்களின் திருப்பணிகளில் தம்மை முழுமையாக
ஈடுபடுத்திக் கொண்டு, இக்கோயிகளில் வளர்ச்சிக்கு இவர் அரிய தொண்டாற்றி இருக்கிறார். இக்கோயில்களின்
தக்காராகவும் பொறுப்பேற்றுச் சிறப்புறப் பணியாற்றி இருக்கிறார் !
பணி ஓய்வு:
ஆசிரியப் பணியில் 38 ஆண்டுகளை மகிழ்வுடன் ஒப்படைத்துக் கொண்ட இவர் 1985 ஆம் ஆண்டு
ஏப்ரல் 30 ஆம் நாள் (30-04-1985) தனது கற்பிக்கும் உலாவை
நிறைவு செய்தார். குமுகாயப் பணியான கற்பிக்கும் பணியில் தன்னை முழுமையாக ஒப்படைத்துக் கொண்ட
இவர், அத்துணை எளிதாகக் குமுகாயத்திலிருந்து விலகி இருக்க முடியுமா என்ன ?
ஓய்வூதியர் சங்கம்:
வேதாரணியம் வட்டத்தில்
1985 வாக்கில் இயங்கி வந்த ஓய்வூதியர் சங்கத்துடன் இவருக்குத் தொடர்பு
ஏற்பட்டது. இத்தொடர்பு சில மாதங்களில் இவரை அச்சங்கத்தின் செயலாளராகப் பொறுப்பு
ஏற்கச் செய்தது. சங்கத் தலைவராக இருந்த நினைவில் வாழும் திரு.க.பி.முருகையாத் தேவர் அவர்களுடன் இணைந்து ஓய்வு
பெறும் அலுவலர்களுக்குக் கிடைக்க வேண்டிய பணப் பயன்களைக் கணக்கிட்டு, விண்ணப்பங்களைத்
தயாரித்து அளித்தல், உரிய காலத்தில் அவை கிடைக்கச் செய்ய நடவடிக்கை எடுத்தல் ஆகிய பணிகளில்
தம்மை முழு நேர ஊழியராக ஒப்படைத்துக் கொண்டார். ஓய்வூதியர்களின்
கோரிக்கைகள் தொடர்பாகப் பல போராட்டங்களையும் நடத்தி இருக்கிறார் !
சங்கத் தலைவராக இருந்த திரு க.பி.முருகையாத் தேவர் உடல் நலிவுற்ற பிறகு, தலைவர்
பொறுப்பு இவரை வந்தடைந்தது. தன் சொந்த ஊரான கடிநெல்வயலிலிருந்து காலையில் 9-00 மணி
வாக்கில் புறப்படும் இவர், 8 கி.மீ தொலைவில் உள்ள வேதாரணியத்திற்கு சிற்றுந்து
மூலம் சென்று சங்கப் பணிகளைக் கவனித்து விட்டு மாலை 6-00 மணிக்கு
வீடு திரும்புவதை தனது அன்றாடக் கடமையாக்கிக் கொண்டார். 58 ஆம்
அகவையில் தொடங்கிய இப்பணி இவருக்கு 92 அகவை
நிறையும் வரைத் தொடர்ந்து கொண்டிருந்தது. மனம் தளராவிட்டாலும், உடல்
தளர்ந்து விட்டமையால் கடந்த ஓராண்டாகச் சங்கப் பணிகளிலிருந்து தன்னை விடுவித்துக்
கொண்டு வீட்டிலேயே ஓய்வெடுத்து வருகிறார் !
நிறைவுரை:
சாதனைகள் பல படைத்த சரித்திர நாயகன் அண்ணன் மீனாட்சி சுந்தரம் அவர்கள் நிறைந்த உடல் நலத்துடன் நீடு வாழ
வாழ்த்துவோம் ! வாழ்த்துவதற்கு அகவை ஒரு தடையாகாது ! வாழ்த்துவோம் ! அண்ணன் அ.மீனாட்சிசுந்தரம் – பார்வதி அம்மையார் இணையர் இருவரும் வாழ்க ! வாழ்க ! பல்லாண்டு ! வாழ்க ! வாழ்க ! வாழ்கவே !
**********************************************************************
திரு.மீனாட்சிசுந்தரம்
வாழ்க்கை வரலாற்றில்
சில முகாமையான
நிகழ்வுகள் !
***********************************************************************
10-04-1927. அ.மீனாட்சி சுந்தரம் பிறப்பு.
28-04-1927. தாயார் மீனாட்சி அம்மையார் மறைவு.
00-09-1933. கடிநெல்வயலில் 1-ஆம் வகுப்பில் சேரல்.
00-06-1938 ஆயக்காரன்புலத்தில் 6-ஆம் வகுப்பில் சேரல்.
00-06-1940. திருத்துறைப்பூண்டியில் 8-ஆம் வகுப்பில் சேரல்.
00-03-1943 பள்ளியிறுதி வகுப்பு (11 ஆண்டு) தேர்ச்சி
00-06-1943. தஞ்சையில் ஆசிரியர் பயிற்சியில் சேரல்
21-05-1946. தம்பி அ.சீனிவாசன் பிறப்பு.
00-00-1947. ஆசிரியராகத் திருத்துறைப்பூண்டி பள்ளியில் பணியில் சேரல்.
00-11-1947. சீனிவாசனின் தாயார் சுந்தராம்பாள் அம்மையார் மறைவு.
00-00-1948. மீனாட்சிசுந்தரம் – பார்வதி திருமணம்.
18-06-1970. மகள் மீ.விசயலட்சுமி- தங்கராசு திருமணம்
18-06-1970. மகள் மீ.வசந்த கோகிலம் - பசுபதி திருமணம்.
18-04-1974.
தந்தை சீஅருணாச்சல தேவர் மறைவு.
10-06-1974. தம்பி அ. சீனிவாசன் – செல்வி ஆனந்தி திருமணம்.
28-07-1976. தம்பி அ. சீனிவாசன் படைக்கலத் தொழிலகத்தில்
பணியேற்பு.
19-05-1978. மகள் மீ.செந்தமிழ்ச்செல்வி – ஆ.இராசேந்திரன்
திருமணம்.
19-05-1978. மகன் மீ.கோவிந்தராசு – இரேவதி திருமணம்.
30-04-1985. ஆசிரியப் பணியிலிருந்து ஓய்வு பெறல்.
10-02-1986. மகள் மீ.இந்திராணி –
சொ.குணசேகரன் திருமணம்.
07-07-1991. மகள் பத்மசுந்தரி - சு.முருகேசன் திருமணம்
08-09-1991. மகன் மீ.இராசேந்திரன் – இரா.கற்பகம் திருமணம்.
03-07-1995. மகன் அருட்செல்வன் – புவனேசுவரி திருமணம்.
31-05-2020. அ.மீனாட்சிசுந்தரம் மறைவு.
19-10-2023. மனைவி மீ.பார்வதி அம்மையார் மறைவு.
=======================================================
(திரு.மீனாட்சி சுந்தரம் அவர்கள் 31-05-2020 அன்று காலை 8-20 மணியளவில்
இயற்கை எய்தினார்)
========================================================
![]() |
| சீ.அருணாச்சல தேவர்.(தந்தை) |
![]() |
| மீ.பத்மசுந்தரி. |
.jpg)
%20%E0%AE%A4%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%20%20%20%20(10-02-2011).jpg)














