என் தமிழ் உறவுகள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

சனி, 29 பிப்ரவரி, 2020

(04) இரவி வையாபுரி (திரு).வை - தஞ்சாவூர்.

தோற்றம்:

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப் பூண்டி வட்டம் திருவலஞ்சுழி என்னும் சிற்றூரில்  1966 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 7 ஆம் நாள் இரவி பிறந்தார். இவரது தந்தையார் பெயர் வையாபுரிப் பிள்ளை. தாயார் பார்வதி அம்மையார் !

பெற்றோர் பிறப்பிடம்:

இரவியின்  தந்தை வையாபுரிப் பிள்ளை, நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரணியம் வட்டம் ஆயக்காரன்புலம் 3 ஆம் சேத்தி,  நல்லான் குத்தகை என்னும் ஊரில் பிறந்தவர். புலால் உணவு உண்ணாத தூய சைவக் குடும்பத்தைச் சேர்ந்த இவர், வேதாரணியம் ஆருகில் உள்ள புட்பவனம் என்னும் ஊரில் வாழ்ந்து வந்த .திருஞானம் பிள்ளை என்பவரின் மகள் பார்வதி அம்மையாரை மணந்தவர் !

தொடக்கக் கல்வி:

வையாபுரிப் பிள்ளையின் செல்வப் புதல்வனான இரவியை, இனி இரவி வையாபுரி என்றே குறிப்பிடுவோம். இவர் 1970 ஆம் ஆண்டு விசயதசமியன்று திருத்துறைப்பூண்டி வட்டம், களப்பால் என்னும் ஊரில் உள்ள தொடக்கப் பள்ளியில் முதலாம் வகுப்பில் சேர்க்கப்பட்டார். முதலிரண்டு வகுப்புகளையும் இங்கு பயின்ற இரவி வையாபுரி 1972 ஆம் ஆண்டு சூன் மாதம் திருத்துறைப் பூண்டி வட்டம், வங்கநகர் என்னும் சிற்றூரில் உள்ள தொடக்கப்பள்ளியில் 3 ஆம் வகுப்பில் சேர்க்கப்பட்டார் !

நான்காம் வகுப்பினையும் இதே பள்ளியில் தொடர்ந்த இரவி வையாபுரி, ஐந்தாம் வகுப்புப் படிப்பிற்காக வேதாரணியத்தில் உள்ள தொடக்கப்பள்ளியில் சேர்க்கப்பட்டார். இங்கு இவரது தாய்வழிப் பாட்டனார் வீட்டில் தங்கிப் பள்ளிக்குச் சென்று வந்தார் !

உயர்நிலைக் கல்வி:

இவர் கால்களில் சக்கரம் கட்டிக் கொண்டிருந்தார் போலும் ! ஆறாம் வகுப்புப் படிப்பதற்காக திருத்துறைப்பூண்டி வட்டம் மருதவனம் என்னும் ஊருக்குப்  போய்ச் சேர்ந்தார். இவரது பெற்றோர் வங்ககரில் குடியிருந்து வந்ததால், அருகில் இருந்த மருதவனத்திற்குச் சென்று வருவது இவருக்கு எளிதாகவே இருந்தது. காற் சக்கரங்கள் மீண்டும் சுழலத் தொடங்கியது ! இவரது பெற்றோர், திருவாரூர் மாவட்டம் ஆலங்குடி அருகில் உள்ள பூனாயிருப்பு என்னும் ஊருக்கு இடம் பெயர்ந்ததால், இவரும் தனது படிப்புக்காகப் பள்ளி மாற வேண்டி வந்தது. 

1976 ஆம் ஆண்டு சூன் மாதம் ஆலங்குடியில் உள்ள உயர்நிலைபள்ளியில் 7 ஆம் வகுப்பில் இவர் சேர்ந்தார். இவருக்கு வாய்த்த நற்பேறோ என்னவோ, இவர் 7, 8, 9 ஆகிய மூன்று வகுப்புகளையும் இதே பள்ளியிலேயே தொடர்ந்து பயில முடிந்தது. ஆனால் காற் சக்கரம் சும்மா இல்லை. மீண்டும் சுழன்றது. 10 ஆம் வகுப்புக் கல்விக்காக இவர் மீண்டும் வேதாரணியம் சென்றார். முன்பு போலவே தாய்வழிப் பாட்டனார் வீட்டில் தங்கிருந்து படித்து வந்தார் !

அடுத்து மேனிலைக் கல்வியாயிற்றே ! நல்ல பள்ளியில் படிக்க வைக்கப் பெற்றோர் விருப்பம் கொண்டிருந்தனர். பெற்றோர் பூனாயிருப்பில் குடியிருந்ததால், அங்கிருந்து 6 கி.மீ தொலைவில் உள்ள நீடாமங்கலத்தில் உள்ள மேனிலைப் பள்ளியில் இரவி வையாபுரி 11 ஆம் வகுப்பில் 1980 ஆம் ஆண்டு சேர்ந்து பயின்றார். வீட்டிலிருந்து அன்றாடம் ஈருருளியில் (BI-CYCLE) பள்ளிக்குச் சென்று வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். 12 ஆம் வகுப்பையும் இதே பள்ளியில் பயின்று தேர்ச்சி பெற்றார் !

பணி தேடல்:

பன்னிரண்டு வகுப்புகளைப் பயில ஏழு முறைப் பள்ளி மாற்றம் நிகழ்ந்து விட்டது. இனிமேலும் படிப்புக்காக அலைய வேண்டாம். பணியில் அமரும் வாய்ப்புகளைத் தேடலாம் என்று இரவி வையாபுரியும் அவர் பெற்றோரும் முடிவு செய்தனர். பணி வாய்ப்புக்காகப் பல வழிகளில் முயன்றனர். ஓராண்டு காலம் இதில் உருண்டோடியது !

படைத்துறைப் பணி:

முனைப்பான முயற்சியின் விளைவாக இவருக்குப் படைத் துறையில் (MILITARY SERVICE) பணி வாய்ப்புக் கிட்டியது. படைத்துறையில் கைவினைஞராக (CRAFTSMAN) 1983 ஆம் ஆண்டு சூன் மாதம் 6 ஆம் நாள் பணியில் சேர்ந்தார். அன்றே ஈராண்டு காலப் பயிற்சியும் மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் தொடங்கியது. பயிற்சி நிறைவில் கைவினைஞராக (CRAFTSMAN) உத்தர காண்ட் மாநிலம் டேராடூனில் பணியில் அமர்த்தப்பட்டார். பின்பு அங்கிருந்து லான்ஸ் நாயக்” (NANSNAIK) பதவிக்கு உயர்வு பெற்று 1988 ஆம் ஆண்டு மே மாதம் ஜம்மு-கஷ்மீர் மாநிலம் லடாக்கிற்கு (LADAKH) மாற்றப்பட்டார் ! இங்கு ஈராண்டுகள் பணி புரிந்த பிறகு நாயக்” (NAIK) பதவிக்கு உயர்த்தப் பட்டு மகாராட்டிர மாநிலம் புனே நகருக்கு மாற்றப்பட்டுப் பணி புரிந்து வந்தார் !

திருமணம்:

புனேயின் இவர் பணிபுரிந்து வருகையில் திருமண வாய்ப்புக் கைகூடி வந்தது. 1991 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 18 ஆம் நாள், இவருக்குத் திருமணமாயிற்று. மன்னார்குடி வட்டம் சேரன்குளம் என்னும் ஊரைச் சேர்ந்த இரகுநாத பிள்ளைசெண்பகலட்சுமி இணையரின் நான்காவது மகள் இராசவல்லி என்னும் மங்கை இவருக்கு வாழ்க்கைத் துணைவி ஆனார் !

மக்கள் செல்வம்:

இவ்விணையருக்கு  1992 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 5 ஆம் நாள் பெண் மகவொன்றுகிர்கியில் (KIRKEE) உள்ள படைத்துறை மருத்துவமனையில் பிறந்தது. வீணா என்று பெயரிடப் பெற்ற இப் பெண்மகவு பிற்காலத்தில் பொறியியல் வாலை மற்றும் வணிக மேலாண்மை மேதை (B.E.,M.B.A) பட்டங்கள் பெற்று, வளைகுடா நாடொன்றில் தன் கணவர் மற்றும் ஒரு ஆண் மகவுடன் வாழ்ந்து வருகிறார் !

இரவி வையாபுரிஇராசவல்லி இணையருக்கு இரண்டாவதாக ஒரு ஆண் குழந்தை 28-02-1996 அன்று பிறந்தது. சூர்யராஜ் என்று பெயரிடப்பெற்ற இக்குழந்தை இன்று பொறியியலில் வாலைப் பட்டம் (B.E.) பெற்று ஓசூரில் ஒரு நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறார் !

திருமணத்திற்குப் பிந்தைய பணி:

1992 ஆம் ஆண்டு பெண் மகவு பிறந்த பிறகு, இரவி வையாபுரி படைத் துறையிலேயே உள்ள பயிற்சிப் பள்ளியில் மின்னியலில் பட்டயப் படிப்பில் சேர்வதற்கான திறனறித் தேர்வை எழுதினார். இதற்கிடையில் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள  பெரோஸ்பூருக்கு  (FEROZPUR) இடமாற்றம் செய்யப்பெற்று 1993 சூன் மாதம் பணியில் சேர்ந்தார். திறனறித் தேர்வில் தேர்ச்சி பெற்றதைத் தொடர்ந்து பட்டயப் படிப்பில் 1994, மார்ச்சு மாதம் பயிற்சியில் சேர்ந்தார். பயிற்சிக் காலம் 14 மாதங்கள்.  பட்டயப் படிப்புக்கான பயிற்சியை நிறைவு செய்து இறுதித் தேர்விலும் 1995, மே மாதம் தேர்ச்சி அடைந்தார் !

பட்டயத் தகுதி (DIPLOMA) பெற்றதும், படைத்துறை  அலுவலகம்  இவரைத்  தொழில்நுட்பப் பிரிவில்ஹவில்தார் மேஜர்” (HAVILDAR MAJOR) பதவிக்கு உயர்த்தி, அரியானா மாநிலம்ஹிஸார்” (HISSAR) என்னும் இடத்தில் பணியில் அமர்த்தியது. இங்கு சில ஆண்டுகள் பணி புரிந்த பிறகு போபாலில் உள்ள இ.எம்,..  பயிற்சி மையத்திற்கு (E.M.E. TRAINING CENTER) இடமாற்றம் செய்யப்பெற்று 1998, மே மாதம் பணியில் சேர்ந்தார் !

போபால் இ.எம்.. பயிற்சி மையத்திலிருந்துநைப் சுபேதார்” (NAIB SUBEDHAR) பதவிக்கு உயர்த்தப்பட்டு, படைத்துறைத் தலைமை அலுவலகத்திற்கு (ARMY HEAD QUARTERS) 2000 -ஆம் ஆண்டு பிப்ரவரி மாத்தில் இடமாற்றம் செய்யப்பட்டார்,

அயல்நாட்டில் பணி:

ஆப்பிரிக்காவில் உள்ளபோட்ஸ்வானா” (BOTSWANA) என்னும் நாட்டிற்கு இந்தியாவிலிருந்து படைத்துறையினரை அனுப்பி, அந்நாட்டுப் படைகளுக்குப் பயிற்சி அளிக்கும் திட்டத்தின் கீழ் படைப்பிரிவு ஒன்று 2002 –ஆம் ஆண்டு மே மாதம் அனுப்பப்பட்டது. இதில் இரவி வையாபுரியும் இடம் பெற்றுபோட்ஸ்வானாசென்றார். குடும்பத்தினரையும் அங்கு அழைத்துச் செல்ல அரசு இசைவளித்ததால், இவர் தன் குடும்பத்தினரையும்  போட்ஸ்வானாவுக்கு அழைத்துச் சென்றார். அங்குப் பணியின் இருக்கும் போதேசுபேதார்” (SUBEDHAR) ஆகப் பதவி உயர்வும் பெற்றார் !

பயிற்றுநர் பணி:

மூன்றாண்டுகள் அயல்நாட்டில் பணிபுரிந்த பிறகு 2005 –ஆம் ஆண்டு சூன் மாதம் இந்தியா திரும்பினார். இங்கு வந்த பிறகு தெலங்கானா மாநிலம் செகந்திராபாத் (SECUNDERABAD) நகாரில் உள்ள இ.எம்.. பொறியியல் கல்லூரியில் பயிற்றுநராகப் பணியில் அமர்த்தப்பட்டார் !

விழை ஓய்வு:

ஏறத்தாழ 23 ஆண்டுகள் படைத்துறையில் பணியாற்றிய பிறகு, பணியிலிருந்து முன்னதாகவே ஓய்வு பெற விரும்பி (PREMATURE RETIREMENT) விண்ணப்பித்ததன் பேரில் 2006 ஆம்ஆண்டு அக்டோபர் மாதம் 31 –ஆம் நாள் படைத்துறைப் பணியிலிருந்து விடுவிக்கப்படார் !

ஓய்வுக்குப் பிந்தைய பணி:

படைத்துறைப் பணியிலிருந்து ஓய்வு பெற்றுச் சொந்த ஊரான தஞ்சாவூருக்கு வந்த பிறகு ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ்” (RELIENCE COMMUNICATIONS) என்னும் தனியார் நிறுவனத்தில் களப் பொறியாளராக (FIELD ENGINEER) ஈராண்டுகள் பணிபுரிந்த பிறகு இந்தியர் அளகையில் (INDIAN BANK) எழுத்தராக (CLERK) முறையாகத் தேர்வு செய்யப்பட்டு, 2009 –ஆம் ஆண்டு திசம்பர் மாதம்  11 –ஆம் நாள்   நாகை மாவட்டம் வேதாரணியம் கிளையில் பணியில் அமர்த்தப்பட்டார் !

அளகைப்பணி:

2009 –ஆம் ஆண்டு இந்தியர் அளகையில் (RECRUITMENT IN INDIAN BANK) எழுத்தராகப் பணியில் சேர்ந்த இவர், கடந்த 11 ஆண்டுகளாக அளகைச் சேவையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வருகிறார். வேதாரணியம், திருப்பூந்துருத்தி ஆகிய கிளைகளில் பணியாற்றிய இவர்  இப்பொழுது, தஞ்சாவூர் நகரில் உள்ள ஈஸ்வரி நகர் கிளையில் பணியாற்றிவருகிறார் !

தொழிற்சங்கப் பணி:

இந்தியர் அளகையின் தொழிற்சங்கமான அனைத்திந்திய அளகைப் பணியாளர் கும்பகோணம் வட்டார அலகின் உதவிச் செயலாளராகக் கடந்த மூன்று ஆண்டுகளாகச் செயலாற்றி வரும் இவர், அளகை அலுவலர்களின் நலனுக்காகப் பாடுபடுவதைப் பெருமையாகக் கருதிச் செயல்பட்டு வருகிறார் !

முடிவுரை:

செய்யும் தொழிலே தெய்வம் என்னும் கோட்பாட்டை, முன்னிறுத்தி, எந்த ஊரில் பணியாற்றினாலும், எந்தப் பணியை மேற்கொண்டிருந்தாலும், அதைச் செவ்வனே செய்திட வேண்டும் என்னும் என்னும் கருத்துக் கொண்டிருக்கும் இவர், தன் பணியில் மேலும் மேலும் பல முத்திரைகளைப் பதித்து வாழ்வில் உயர்ந்திட, வாழ்வாங்கு வாழ்ந்திட வாழ்த்துவோம் !

தொடர்பு முகவரி:
 இரவி வையாபுரி,
45, சக்தி நகர்,
மானோசிப்பட்டி சாலை.
தஞ்சாவூர் 613 004
மின்னஞ்சல்: suryaveena69@gmail.com
எழினி: 94426 38776
------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.ஆ: 2051, கும்பம் (மாசி),17]
{29-02-2020}
------------------------------------------------------------------------------------------------------








சனி, 22 பிப்ரவரி, 2020

(03) இராமச்சந்திரன் (திரு).பா - பெரியகுளம்.

தோற்றம்:

தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டம், எண்டப்புளி என்னும் ஊரில் 1980 ஆம் ஆண்டு, ஏப்பிரல் திங்கள், 19 ஆம் நாள் இராமச்சந்திரன் பிறந்தார். பெரியகுளத்திலிருந்து வத்தலக் குண்டு செல்லும் சாலையில் 5 கி.மீ தொலைவில் அமைந்துள்ள இவ்வூரின் அருகில் முருகமலை என்னும் வனப்பு மிக்க மலை அமைந்துள்ளது. இவ்வூரிலிருந்து பார்த்தால் கொடைக்கானல் மலையின் எழில்மிகு தோற்றம் கண்களுக்குத் துல்லியமாகத் தெரியும். இராமச்சந்திரனின் தந்தையார் பெயர் பாலுச்சாமி. தாயார் பழனி அம்மையார் !

உடன்பிறப்புகள்:

இவருடன் உடன்பிறந்தோர் நால்வர். தமையனார் பெயர் கிருட்டிணசாமி, தமக்கையார் அழகம்மை, தம்பியர் கண்ணதாசன், மற்றும் அழகர்சாமி ! அனைவருக்கும் திருமணமாகித் தத்தம் குடும்பத்தினருடன் வாழ்ந்து வருகின்றனர் !

பள்ளிக் கல்வி:

ஐந்து அகவை ஆகும் போது இராமச்சந்திரன் தனது கல்வி உலாவைத் தொடங்கினர். எண்டப்புளியியிலேயே இயங்கி வந்த சிறீ மார்க்கண்டேயா தொடக்கப் பள்ளியில் 1985 ஆம் ஆண்டு முதலாம் வகுப்பில் அடியெடுத்து வைத்தார் ! இப்பள்ளியிலேயே ஐந்தாம் வகுப்பு வரைப் பயின்ற இவர் , தனது உயர்நிலைப் பள்ளிக் கல்விக்காக பெரியகுளம் செல்ல நேர்ந்தது. இங்குள்ள விக்டோரியா அரசி அரசினர் மேனிலைப் பள்ளியில் 1990 ஆம் ஆண்டு சூன் மாதம் ஆறாம் வகுப்பில் சேர்ந்து பயிலத் தொடங்கினார் !

இவரது கல்வி உலாவில் அவ்வப்போது தடைகள் பல தோன்றினாலும் அவற்றை எல்லாம் கடந்து வெற்றிகரமாக நடை பயின்ற இவர், 9 –ஆம் வகுப்புப் படிக்கையில் ஏனோ சோர்வடைந்தார்.  ஆண்டுத் தேர்வு என்னும் தடையைக் கடக்க முடியாமல் தளர்ந்து போனார். தேர்வில் தோல்வியடைந்தார் !

இவரது கல்வியில் அக்கறை கொண்டிருந்த தந்தையார் பாலுச்சாமி, என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்தார்.; மும்முரமாகச் சிந்தித்தார். இறுதியில், பள்ளி மாற்றம் இதற்குத் தீர்வாக அமையும் என்று நம்பினார். எண்டப்புளியிலிருந்து  5  கி.மீ. தொலைவில் உள்ள வடுகப்பட்டி அரசினர் மேனிலைப் பள்ளியில்  தன் மகனை 1994 ஆம் ஆண்டு 9 ஆம் வகுப்பில் சேர்த்துப் படிக்க வைத்தார். புதிய பள்ளி ! புதிய சூழ்நிலை ! இராமச்சந்திரனுக்குப் படிப்பில் நாட்டம் ஏற்பட்டது ! வகுப்பில் சிறந்த மாணவனாகத் திகழத் தொடங்கினார். இறுதியில் 1998 ஆம் ஆண்டு மார்ச்சுத் திங்களில் தனது மேனிலைக் கல்வியை (12 ஆம் வகுப்பு) அதிக மதிப்பெண்கள் பெற்று நிறைவு செய்தார் !

கல்லூரிக் கல்வி:

தந்தையார் பாலுச்சாமி, தன் மகன் பட்டதாரியாக இந்தக் குமுகாயத்தில் பெருமையுடன் நடமாட வேண்டும் என்று ஆசைப்பட்டார்.  இதற்காக எத்துணை இன்னல்கள் வந்தாலும் அவற்றை எதிர்கொள்ள அணியமானார். விளைவு ? தன் மகனையும் அழைத்துக்கொண்டு 65 கி.மீ தொலைவில் உள்ள  உசிலம்பட்டியில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் கலைக் கல்லூரிக்குச் சென்று, கல்லூரி முதல்வரைச் சந்தித்து உரையாடினார். கல்லூரியில் இடம் கிடைத்தது. வணிகப் பொருளியல் வாலை (BACHELOR OF BUSINESS ECONOMICS)  வகுப்பில் 1998 - ஆம் ஆண்டு சூன் மாதம் சேர்ந்து பயிலத் தொடங்கினார் !

திருமணம்:

கல்லூரியில் இரண்டாம் ஆண்டை நிறைவு செய்திருந்த நிலையில் வீட்டில் திருமணப் பேச்சு முளைவிடத் தொடங்கியது. இவர் வாழ்ந்து வரும் அதே எண்டப்புளியில் இன்னொரு பகுதியில் வாழ்ந்து வந்த பழனிவேல்சரசுவதி அம்மையார் இணையினரின் ஒரே மகளான  திருமலைச் செல்வியை இராமச் சந்திரனுக்குத் திருமணம் செய்விக்கலாம் என்று கருதி இரு வீட்டாரும் கலந்து பேசத் தொடங்கினர்.  இறுதியில், படிப்பும் தொடரட்டும், திருமணமும் நடக்கட்டும் என்று முடிவு செய்து 2000 –ஆம் ஆண்டு, சூலைத் திங்கள் 12 ஆம் நாள் இருவரையும் இல்லற வாழ்வில் இணைத்து வைத்தனர் !

பட்டப் படிப்பு:

திருமணத்திற்குப் பிறகும் இராமச்சந்திரன் படிப்பைத் தொடர்ந்து, பயின்று, பட்டம் பெற்று, தந்தையார் பாலுச்சாமி அவர்களின் கனவை நிறைவேற்றி வைத்தார் . கையில் பட்டம் ! மனதில் என்னென்னவோ திட்டம் !

பணிவாய்ப்புத் தேடல்:

படித்தவர்களுக்கெல்லாம் இந்த நாட்டில் வேலை கிடைத்து விடுகிறதா என்ன ? இராமச்சந்திரன் கடுமையாக முயன்றார். திருப்பூர், பல்லடம், கோவை, தென்காசி, திருநெல்வேலி, தேனி என்று இவர் வேலை தேடி அலைந்த ஊர்களின் பட்டியல் நெடியது. அங்கெல்லாம் தனியார் துறைகளில் வேலை வாய்ப்புகள் கிடைத்தாலும், போதுமான ஊதியம் கிடைக்கவில்லை !

தந்தை மறைவு:

குடும்ப ஓடம் மனிதக் குமுகாயம் என்னும் ஆற்றில் மெல்ல ஆடி அசைந்து சென்று கொண்டிருக்கையில், இவரது தந்தையார் பாலுச்சாமி 2007 ஆம் ஆண்டு கதுமென (திடீரென) மறைந்து போனார். தந்தையின் பிரிவு இராமச்சந்திரனை நிலைகுலைந்து போகச் செய்தது. தந்தை மீது இவருக்கும், இவர் மீது தந்தைக்கும் இருந்த பற்று (பாசம்) என்னும்  கயிறு மிகவும் வலுவானது. அறுவாதது; அறுக்கவும் முடியாதது. இதன் தாக்கம், இராமச்சந்திரனுக்குக் குடும்பத்தின் மீதான பிணைப்பு குலைந்து போய்விடுமோ என்று உற்றார் உறவினர்கள் அச்சப்படுமளவுக்கு இட்டுச் சென்றது. எனினும் இந்த வீட்சியிலிருந்து தானே மீண்டெழும் அளவுக்கு அவருக்கு மன உறுதி மறுபிறவி எடுத்தது இன்னும் வியப்புக்குரிய ஒன்றாகவே இருக்கிறது !

சொந்தத் தொழில்:

அரசியல் சூழ்ச்சிகளால் அலைப்புற்றுக் கிடக்கும் தமிழ்நாட்டில், தனக்கு அரசு வேலை கிடைக்காது என்பதைப் புரிந்து கொண்ட இராமச்சந்திரன், அடுத்தவனிடம் ஐயாயிரம் உருபாவுக்கு அடிமை வேலை செய்வதை விட, சொந்தமாகத் தொழில் செய்து வருமானம் தேடலாம் என்னும் முடிவுக்கு வந்தார். சொந்த ஊரிலேயே பால் வணிகராக வலம் வரத் தொடங்கினார். பால் கறவை மையங்களுக்குத் தன் பேடுருளியில் (MOPED) சென்று, பாலைச் சேகரித்துக் கொண்டு வந்து, தன் வீட்டருகே பால் விற்பனையகம் (MILK BOOTH) தொடங்கி நடத்தி வருகிறார். நாளொன்றுக்கு 150 லிட்டர் வரை விற்பனையாகிறது !

எதிர்காலத் திட்டம்:

பால் விற்பனையுடன், இதர பாற் பொருள்களான (MILK PRODUCTS) தயிர், நெய், பால் கோவா  ஆகிவற்றையும் தன் விற்பனையகத்தில் (MILK BOOTH) கிடைக்கச் செய்யவேண்டும் என்பது இவரது திட்டம். மாவட்டத் தொழில் மையம் மூலம் இதற்கான நயனுரை (ADVICE) பெறவும் திட்டமிட்டிருக்கிறார். இதற்காகப் பயிற்சி வகுப்புகள் நடத்தப் பெற்றால் அதில் கலந்து கொள்ளவும் திட்டமிட்டிருக்கிறார் !

குடும்பம்:

இராமச்சந்திரன்திருமலைச் செல்வி இணையருக்கு அர்சவர்த்தினி (18), விட்டுணுதாசு (விண்ணவதாசன்) (17) என இரு மக்கள் செல்வங்கள் இருக்கின்றனர்.  மகள் 12 –ஆம் வகுப்பிலும், மகன் 11-ஆம் வகுப்பிலும் எ.புதுப்பட்டி மேனிலைப் பள்ளியில் பயின்று வருகின்றனர். பிள்ளைகளுக்கு  ஏட்டுப் படிப்பு மட்டும் போதாது என்பதை உணர்ந்த இவ்விணையர், அவர்களுக்குப் பிடித்தமான தொழிற் பயிற்சி வகுப்புகளில் சேர்த்து பயிற்சி பெற வைக்கவும் திட்டமிட்டு வருகின்றனர் !

தமிழார்வம்:

இராமச்சந்திரனுக்கு இயல்பாகவே தமிழ் மீது பற்று அதிகம். அதனால் சொக்கி என்னும் காலாண்டு இலக்கிய இதழை, இவர் நீண்ட காலமாக நடத்தி வருகிறார். தனி இதழ் விலை உருபா 25-00. இருநூறு  படிகள் அச்சிட்டு பெரியகுளம், தேனி மற்றும் அவற்றின் சுற்று வட்டாரங்களில் பெட்டிக் கடைகள் மூலம் விற்பனை செய்யப்படுகின்றன. அத்துடன் தமிழ்ப் பணி மன்றம் என்னும் முகநூற் குழுவில் உறுப்பினர் ஆன பின்பு, தமிழார்வம் இவருக்குக் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கிவிட்டது. பாடல்கள் புனையவும், பாட்டரங்கங்களில் கலந்து கொண்டு பாடல்கள் படைக்கவும் திறன் பெற்றுள்ள இராமச்சந்திரன், தமிழ்த் தாயின் முன்னணித் தொண்டர் என்பதில் ஐயமில்லை !

வலைப்பூ:

தனது படைப்புகளைப் பாதுகாக்கவும், பிறருடன் பகிர்ந்து கொள்ளவும் வாய்ப்பாக இவர் பெரியகுளம் பாலு இராமச்சந்திரன் என்னும் வலைப்பூவை (BLOG) நிறுவிப் பேணி வருகிறார். வலைப்பூ முகவரி : http://thamizhkulam.blogspot.com .பத்தோடு பதினொன்றாக இருப்பதை விட , ஆயிரத்தில் ஒருவராக இருப்பதில் தான் இவருக்கு ஆர்வம் அதிகம் !

முடிவுரை:

தொழிற்திறன் வல்லமை பெறும் வாய்ப்புகளைப் பெறாமல், ஏட்டுக் கல்வி வாய்ப்பை மட்டுமே பெற்றதால், வாழ்க்கையில் நிரம்பவும் இன்னற் பட்டிருக்கிறார் இராமச்சந்திரன். அவர் எதிர்கொண்ட இன்னல்களை அவரது மக்கள் செல்வங்களும் நேர்கொள்ளக் கூடாது. எனவே இருவரையும் அவர்களுக்குப் பிடித்த தொழிற் பயிற்சிகளில் சேர்ந்து பயிற்சி பெறும் வாய்ப்பை ஏற்படுத்தித் தர முயல்வார் என நம்புகிறோம். வாழ்க தமிழ்த் தொண்டர் இராமச்சந்திரன் ! வாழிய அவரது மனைவியும் மக்களும் ! வாழ்வில் அனைத்து வளங்களையும் பெற்று இராமச்சந்திரன் குடும்ப உறுப்பினர்கள் நீடுழி வாழ்க என வாழ்த்துவோம் !

தொடர்பு முகவரி:

பாலு இராமச்சந்திரன்,
ஆர்.டி.யூ.காலனி,
எண்டப்புளி அஞ்சல்,
பெரியகுளம் வட்டம்,
தேனி மாவட்டம்,
.குஎண் 625604.
எழினி - 8754711841
மின்னஞ்சல் bramji319@gmail.com

------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.பி.2051,கும்பம்(மாசி)09]
{21-02-2020}

------------------------------------------------------------------------------------------------------
 



வெள்ளி, 14 பிப்ரவரி, 2020

(02) மீனாட்சிசுந்தரம் (திரு.) அ - கடிநெல்வயல்.

தோற்றம்:

நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரணியம் வட்டம், கடிநெல்வயல் என்னும் சிற்றூரில் 1927 –ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம், 10 ஆம் நாள் பிறந்தவர் திரு.மீனாட்சி சுந்தரம். இவரது தந்தையார் பெயர் சீ.அருணாச்சல தேவர். தாயார் மீனாட்சியம்மை. பிறந்து சில மாதங்களிலேயே, தாயாரைப் பறிகொடுத்த திரு. மீனாட்சிசுந்தரம், தனது தாய்வழிப் பாட்டி மற்றும் தாய்வழிச் சிற்றன்னையின் அரவணைப்பில் வளர்ந்து வந்தார் !

தொடக்கக் கல்வி:

தனது பிறந்த ஊரான கடிநெல்வயலில் இயங்கிவந்த தொடக்கப் பள்ளியில் 1933 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் விசயதசமியன்று ஒன்றாம் வகுப்பில் திரு.மீனாட்சிசுந்தரம் சேர்க்கப்பட்டார்.. இளமையிலேயே படிப்பில் மிகுந்த ஆர்வம் காட்டி வந்த திரு.மீனாட்சிசுந்தரம், ஐந்தாம் வகுப்பு வரை அப்பள்ளியிலேயே பயின்றார் !

பள்ளிக் கல்வி:

கடிநெல்வயலிலிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ள ஆயக்காரன்புலத்தில் இயங்கி வந்த இரா. நடேச தேவர் நினைவு அரசு உயர்நிலைப் பள்ளியில் 1938 ஆம் ஆண்டு சூன் மாதம் 6 –ஆம் வகுப்பில் சேர்ந்தார்.  7 –ஆம் வகுப்பு வரை அங்கேயே படித்து வந்த திரு. மீனாட்சி சுந்தரம், தனது 8 –ஆம் வகுப்புப் படிப்பை திருத்துறைப் பூண்டி கழக உயர்நிலைப் பள்ளியில் தொடந்தார். கடுமையான உணவுத் தட்டுப்பாடு தமிழ்நாட்டில் நிலவி வந்த அந்தக் காலச் சூழ்நிலையானது பள்ளிப் பிள்ளைகளுக்கு மிகவும் இன்னல் விளைவித்துப் படிப்பைப் பாதியில் நிறுத்தச் செய்துவந்தது. அந்தச் சூழ்நிலையிலும் கூட , விடாமுயற்சியுடன் தனது படிப்பைத் தொடர்ந்த அவர், 11 ஆம் வகுப்பு (OLD S.S.L.C) வரை அங்கேயே படித்து, தனது பள்ளிக் கல்வியை 1943 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நிறைவு செய்தார் !

ஆசிரியர் பயிற்சி:

பள்ளி இறுதி வகுப்பு வரைப் படித்திருந்த இவர், ஆசிரியப் பணியை விரும்பி, அதற்கான முயற்சிகளில் ஈடுபடலானார். இடைநிலை ஆசிரியர் (SECONDARY GRADE TEACHER) பயிற்சிக்கு விண்ணப்பித்திருந்த இவருக்கு, தஞ்சை இடைநிலை ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் (SECONDARY GRADE TEACHER TRAINING SCHOOL) இடம் கிடைத்து 1943 ஆம் ஆண்டு சூன் மாதம் பயிற்சியில் சேர்ந்தார். போக்குவரத்து வசதிகள் மிகவும் குறைவாகவே இருந்த அந்தக் காலத்தில், 130 கி.மீ தொலைவுக்கு அப்பால் உள்ள முற்றிலும் அறிமுகமில்லா ஊரில்  இரண்டு ஆண்டுகள் தங்கிப் பயிற்சிப் பெற வேண்டிய சூழ்நிலை நிலவியது. எனினும், தனது மன உறுதியால் எதிர்கொண்ட இன்னல்களை எல்லாம் வென்று, வெற்றிகரமாகப் பயிற்சியை முடித்து ஊர் திரும்பினார் !

பணி ஏற்பு:

பயிற்சி முடித்த சில ஆண்டுகளிலேயே தான் படித்த திருத்துறைப் பூண்டி அரசு உயர்நிலைப் பள்ளியிலேயே இவருக்கு இடைநிலை ஆசிரியர் பணி வாய்ப்புக் கிடைத்தது. பிறந்த ஊரில் தந்தையும், தம்பி ஒருவரும் தனியாக வாழ்ந்து வந்த அந்தச் சூழலிலும், திருத்துறைப் பூண்டியில் ஆசிரியப் பணியை ஏற்றுக் கொண்டார் !

திருமணம்:

தன் தாயைக் குழந்தைப் பருவத்திலேயே இவர் இழந்தமையால், இவரது தகப்பனார் இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். இதன் விளைவாகத் தன் தாயின் தங்கையே இவருக்குச் சிற்றன்னையாக அமைந்தார். சிற்றன்னையாரும்  சில ஆண்டுகள் கழித்து, ஒரு ஆண் மகவைப் தந்து விட்டு விரைவில் இறந்து போனார். இவரும், இவரது தம்பி சீனிவாசன் என்பவரும் தாயில்லாப் பிள்ளைகளாக வாழ வேண்டிய துன்பச் சூழ்நிலை நிலவியதால், உறவினர்களின் வலியுறுத்தலால் இவர் திருமணம் செய்து கொள்ள  இசைய வேண்டியதாயிற்று

வேதாரணியம் வட்டத்தில் உள்ள தகட்டூர் என்னும் ஊரின் ஒரு பகுதியான கல்யாணச்சேரி இராசகோபால் தேவர்அரங்கம்மாள் இணையரின் ஒரே மகளான பார்வதி என்னும் மங்கையை இவர் 1945 ஆம் ஆண்டு, தனது 18 –ஆம் அகவையில் மணந்துகொண்டார் ! இவர் தனது ஒரே மைத்துனரான சிவநேசன் என்பவரையும் சில ஆண்டுகளியே இழக்க நேர்ந்தது, பட்ட காலிலேயே படும் என்னும் பழமொழியை நினைவு படுத்துவதாக  அமைந்திருந்தது !

குடும்பம்:

திரு.மீனாட்சி சுந்தரம்பார்வதி அம்மையார் இணையருக்கு கோவிந்தராசு, இராசேந்திரன், அருட்செல்வன் ஆகிய 3 ஆண் மகவினரும், விசயலட்சுமி, வசந்த கோகிலம், செந்தமிழ்ச் செல்வி, இந்திராணி, பத்மசுந்தரி  ஆகிய ஐந்து பெண் மகவினரும் உள்ளனர் ! இந்த எண்மருள் அறுவர் தாத்தா, பாட்டிகளாக  வாழ்வில் உயர்வடைந்து விட்டனர் என்பது மகிழ்ச்சிக் குரிய செய்தி !

பணியிட மாறுதல்கள்:

திருத்துறைப்பூண்டியில் தனது ஆசிரியப் பணியை 1947 ஆம் ஆண்டு தொடங்கிய இவர், அன்றைய ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் இயங்கிவந்த பல பள்ளிகளிலும் தனது கால் தடத்தைப் பதித்துக் கற்பிக்கும் பணியிலும் முத்திரை பதித்து வந்திருக்கிறார்.. தலைஞாயிறு, ஆயக்காரன்புலம், வேதாரணியம், மகாதேவபட்டினம் எனப் பல ஊர்களிலுமாக  மொத்தம் 38 ஆண்டுகளை மாணாக்கர்களின் அறிவுக் கண்களைத் திறந்து வைக்கும் மேன்மையான பணியில் நல்கி தனது பணிக்குப் பெருமை சேர்த்திருக்கிறார் !

பணியிடைக்கால முத்திரைகள்:

வேதாரணியம் அரசு மேனிலைப் பள்ளியில் பணிபுரிகையில், அங்கு அரசு ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் கூட்டுறவுச் சங்கத்தை ஏற்படுத்தி, நயப்பு விலையில் மளிகைப் பொருள்கள் கிடைக்க ஏற்பாடு செய்தார். மாணவர்களுக்கான பாடப் புத்தகங்கள், குறிப்பேடுகள், எழுதுபொருள்கள் ஆகியவையும் நயப்பு விலையில் கிடைக்கப் பெற்றன ! பள்ளி ஆண்டு விழா மற்றும் விளையாட்டுப் போட்டிகளை முன்னின்று நடத்துவதும், விழாவுக்கு முதன்மை விருந்தினரை அழைத்து வந்து அவர்கள் மூலம் பள்ளி மேம்பாட்டுக்கான ஆக்கச்சார்பான உதவிகள் கிடைக்கச் செய்வதிலும் முனைப்பாக  ஈடுபட்டு வந்தார் !

உருவாக்கிய சிற்பங்கள்:

இவர் தனது பணிக்காலத்தில் பல முதல்நிலை மாணாக்கர்களை உருவாக்கி இருக்கிறார். பிற்காலத்தில் புகழ் பெற்ற மருத்துவர்களாகத் திகழ்ந்த சீனிவாசன், விநோதகன், இந்திரசித் ஆகியோர் இவரது மாணவர்களே ! அரசியல் வானில் ஒளிர்ந்த விண்மீன்களான வேதாரணியம் தொகுதி மேனாள்  சட்ட மன்ற உறுப்பினர்களான திரு.மா.மீனாட்சி சுந்தரம், திரு.மா.மாணிக்கம், திரு.எஸ்.காமராசு, திரு.வேதரத்தினம ஆகியோர் இவரது வார்ப்புகளே ! இக்கட்டுரையை வடித்திருக்கும் தமிழ்ப்பணி மன்ற ஆட்சியரும், அவரது சிறிய தந்தை மகனுமாகிய வேதரெத்தினம் எனும் நானும் அவருடைய வார்ப்புதான் என்று சொல்லிக் கொள்வதில் மிகவும் பெருமை அடைகிறேன் !

பொதுப்பணி:

உள்ளூரில் இருக்கும் சிவன் கோயில், மாரியம்மன் கோயில், வேம்படி ஐயனார் கோயில் ஆகிய கோயில்களின் திருப்பணிகளில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு, இக்கோயிகளில் வளர்ச்சிக்கு இவர் அரிய தொண்டாற்றி இருக்கிறார். இக்கோயில்களின் தக்காராகவும் பொறுப்பேற்றுச் சிறப்புறப் பணியாற்றி இருக்கிறார் !

பணி ஓய்வு:

ஆசிரியப் பணியில் 38 ஆண்டுகளை மகிழ்வுடன் ஒப்படைத்துக் கொண்ட இவர் 1985 ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ஆம் நாள் தனது கற்பிக்கும் உலாவை நிறைவு செய்தார். குமுகாயப் பணியான கற்பிக்கும் பணியில் தன்னை முழுமையாக ஒப்படைத்துக் கொண்ட இவர், அத்துணை எளிதாகக் குமுகாயத்திலிருந்து   விலகி இருக்க முடியுமா என்ன ?

ஓய்வூதியர் சங்கம்:

வேதாரணியம் வட்டத்தில் 1985 வாக்கில் இயங்கி வந்த ஓய்வூதியர் சங்கத்துடன் இவருக்குத் தொடர்பு ஏற்பட்டது. இத்தொடர்பு சில மாதங்களில் இவரை அச்சங்கத்தின் செயலாளராகப் பொறுப்பு ஏற்கச் செய்தது. சங்கத் தலைவராக இருந்த நினைவில் வாழும் திரு..பி.முருகையாத் தேவர் அவர்களுடன் இணைந்து ஓய்வு பெறும் அலுவலர்களுக்குக் கிடைக்க வேண்டிய பணப் பயன்களைக் கணக்கிட்டு, விண்ணப்பங்களைத் தயாரித்து அளித்தல், உரிய காலத்தில் அவை கிடைக்கச் செய்ய நடவடிக்கை எடுத்தல் ஆகிய பணிகளில் தம்மை முழு நேர ஊழியராக ஒப்படைத்துக் கொண்டார். ஓய்வூதியர்களின் கோரிக்கைகள் தொடர்பாகப் பல போராட்டங்களையும் நடத்தி இருக்கிறார் !

சங்கத் தலைவராக இருந்த திரு க.பி.முருகையாத் தேவர் உடல் நலிவுற்ற பிறகு, தலைவர் பொறுப்பு இவரை வந்தடைந்தது. தன் சொந்த ஊரான கடிநெல்வயலிலிருந்து  காலையில் 9-00 மணி வாக்கில் புறப்படும் இவர், 5 கி.மீ தொலைவில் உள்ள வேதாரணியத்திற்கு சிற்றுந்து மூலம் சென்று சங்கப் பணிகளைக் கவனித்து விட்டு மாலை 6-00 மணிக்கு வீடு திரும்புவதை தனது அன்றாடக் கடமையாக்கிக் கொண்டார். 58 ஆம் அகவையில் தொடங்கிய இப்பணி இவருக்கு 92 அகவை நிறையும் வரைத் தொடர்ந்து கொண்டிருந்தது. மனம் தளராவிட்டாலும், உடல் தளர்ந்து விட்டமையால் கடந்த ஓராண்டாகச் சங்கப் பணிகளிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு வீட்டிலேயே ஓய்வெடுத்து வருகிறார் !

சாதனைகள் பல படைத்த சரித்திர நாயகன்  அண்ணன் மீனாட்சி சுந்தரம் அவர்கள் நிறைந்த உடல் நலத்துடன் நீடு வாழ வாழ்த்துவோம் ! வாழ்த்துவதற்கு அகவை ஒரு தடையாகாது ! வாழ்த்துவோம் ! அண்ணன் அ.மீனாட்சிசுந்தரம் – பார்வதி அம்மையார் இணையர் இருவரும் வாழ்க ! வாழ்க ! பல்லாண்டு !  வாழ்க ! வாழ்க ! வாழ்கவே !
*****************************************************************************

தொடர்பு முகவரி:

அ.மீனாட்சிசுந்தரம்,
ஓய்வு பெற்ற ஆசிரியர்,
கடிநெல்வயல் (கிழக்கு) அ.நி.
ஆயக்காரன்புலம் III. (வழி),
வேதாரணியம் வட்டம்,
நாகை மாவட்டம்.
அடையெண்: 613 707.

(திரு.மீனாட்சி சுந்தரம் அவர்கள் 31-05-2020 அன்று கலை 8-20 மணியளவில் இயற்கை எய்தினார்)

-----------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.ஆ: 2051, கும்பம் (மாசி),02]
{14-02-2020}

-----------------------------------------------------------------------------------------------------




அ.மீனாட்சிசுந்தரம் - பார்வதி அம்மையார்


சீ.அருணாச்சல தேவர்.(தந்தை)

அ.மீனாட்சிசுந்தரம்.
மீ.பார்வதி அம்மையார் (மனைவி)
அ.சீனிவாசன் (தம்பி)
மீ.கோவிந்தராசு (மகன்)





















மீ.பத்மசுந்தரி.