என் தமிழ் உறவுகள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

செவ்வாய், 7 ஏப்ரல், 2026

(16) கடிநெல்வயல் (திரு) ந.சுப்ரமணியனின் வாழ்க்கை வரலாறு !

 

    கடிநெல்வயல் ந.சுப்ரமணியன்- வாழ்க்கை வரலாறு !




முகவுரை.

என்னுடைய  தந்தையின்  சொந்த அண்ணன் திரு காசிநாத தேவரின் பெயரனும், கடிநெல்வயல் கீழக்காட்டில் பிறந்து, வளர்ந்து  வாழ்ந்து வருபவருமான திரு.ந.சுப்ரமணியன் அவர்களின் வாழ்க்கை வரலாறு இன்று இணையத்தில் பதிவேற்றப்படுகிறது. வலைப்பூ (BLOG)  எனப்படும் இந்த இணையப் பதிவேற்றம் ஆயிரம் ஆண்டுகளானாலும் அழியாதது; யாராலும் அழிக்கவோ,  திருத்தம் செய்யவோ, எதையும் புதிதாகக் கூட்டவோ அல்லது குறைக்கவோ முடியாதது. இந்தப் பக்கத்தைத் திறந்து பார்க்க கூகுளில் சென்று https://thamizhnatpu.blogspot.com என்று உள்ளீடு (TYPE) செய்து   "தேடுக" (SEARCH)  என்பதைச் சொடுக்கினால் ஐந்தாறு வரிகள்  உங்கள் முன் ஓடிவந்து நிற்கும். அதிலிருந்து "தமிழ் நட்பு" என்று காணப்படும்  வரியைச் சொடுக்குங்கள்.  அவ்வளவுதான்!   "தமிழ் நட்பு வலைப்பூப் பக்கம்" திறந்து கொள்ளும்.  அடுத்து நீங்கள் விரும்பும் ஆளிநரின்  (PERSON) வாழ்க்கை வரலாற்றைப் படிக்கத் தொடங்கலாம் !

 

பஞ்சநதிக் குளத்தார் புரம் என்னும் கொடி !

நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரணியம் வட்டம், 123,  வருவாய் ஊரகம் கடிநெல்வயல் என்னும் ஊரில் கீழக்காடு, பஞ்சநதிக் குளத்தார் புரத்தைச்   சேர்ந்தவர் மாரியப்ப தேவர். இவரது மகன் நல்லபொதிய தேவர். இவரது மகன்கள் திரு சீனிவாச தேவர் மற்றும் திரு சிங்காருத் தேவர். இவர்களுள் திரு சிங்காருத்  தேவருக்கு இரண்டு  பிள்ளைகள்.  மூத்தவர் திரு காசிநாத  தேவர்;  இளையவர் என் தந்தையான திரு.வைத்தியநாத தேவர்;  இந்தக் கொடியில் திரு காசிநாத தேவரின் பெயரனாக, அவரது மகன் திரு.கா.நடராசன் இல்லத்தில் மலர்ந்து மணம் பரப்பி வரும்   மலரே திரு  ந.சுப்ரமணியன் !

 

(கடிநெல்வயல் முன்பு தஞ்சாவூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி வட்டத்தில் ஒரு சிற்றூராகத் திகழ்ந்து வந்தது!)

 

தந்தை வழிக் குலக்கொடி:

மாரியப்ப தேவர் > நல்லபொதிய தேவர் > சிங்காருத் தேவர் / பிரகதாம்பாள் அம்மையார் > காசிநாத தேவர் / மாரிமுத்து அம்மையார் > நடராச தேவர் / அலர்மேல் மங்கை அம்மையார் > சுப்ரமணியன் / (மனைவி) சாந்தி..


தாய் வழிக் குலக்கொடி:

குப்புசாமித் தேவர் > சுப்பையாத் தேவர் / அமிர்தவல்லி அம்மையார் > (மகள்) அலர்மேல் மங்கை / (கணவர்) கா.நடராச தேவர் > ந.சுப்ரமணியன் / சாந்தி..

 

தோற்றம்:

நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரணியம் வட்டம், கடிநெல்வயல் என்னும் சிற்றூரில்  பள்ளித் தலைமை ஆசிரியராகப்  பணி புரிந்த திரு.கா.நடராச  தேவர் – அலர்மேல் மங்கை அம்மையாரின் புதல்வராக 1963 – ஆம் ஆண்டு, மே மாதம், 23 – ஆம் நாள்  (23-05-1963)  தோன்றியவர்  திரு. ந.சுப்ரமணியன் !


தொடக்கப் பள்ளிக்  கல்வி:

கடிநெல்வயலில்  இயங்கி வரும் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் 1969 – ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், விசய தசமி நாளன்று திரு சுப்ரமணியன் ஒன்றாம் வகுப்பில் சேர்க்கப்[பட்டார். புத்தாடை உடுத்தி, கைகளில் ஓலைச் சுவடியை ஏந்திக்கொண்டு அன்று அவர் பள்ளி நோக்கி  சுறு சுறுப்புடன் நடைபோட்டது உடன் சென்ற மாணவர்களையே மிகவும் வியக்க வைத்தது !

 

நடுநிலைப் பள்ளிக்  கல்வி:

1974 -ஆம் ஆண்டு ப்பிரல் மாதம் ஐந்தாம் வகுப்புப் படிப்பை முடித்த திரு சுப்ரமணியன், அடுத்து  ஆறாம் வகுப்பில் சேர கருப்பம்புலம் பி.வி.தேவர் நடுநிலைப் பள்ளியை நாடினார். அங்கு 1974 -ஆம் ஆண்டு சூன் மாதம் 6-ஆம் வகுப்பில் சேர்ந்த அவர், 7, 8 – ஆம் வகுப்புகளையும் அதே பள்ளியில் படித்து நிறைவு செய்தார் !

 

உயர்நிலை & மேனிலைப் பள்ளிக் கல்வி:

கருப்பம்புலம் பள்ளியில் 8 - ஆம் வகுப்பு வரைப் படித்த திரு சுப்ரமணியன், அதற்கு மேல் படிக்க, அங்கு மேல் வகுப்புகள் இல்லாமையால், ஆயக்காரன்புலம் இரா.நடேசனார் அரசு மேனிலைப் பள்ளியில் 1977 – ஆம் ஆண்டு சூன் மாதம் 9 – ஆம் வகுப்பில் சேர்ந்தார். அதே பள்ளியில் தொடர்ந்து படித்து, 10, 11 (+1) , 12 (+2) -ஆம் வகுப்புகளையும் படித்து நிறைவு செய்து 1982 – ஆம் ஆண்டு +2 தேர்வில்  தேர்ச்சி பெற்று வெளியில் வந்தார் !

 

பட்டப் படிப்பு:

பள்ளிப் படிப்பை முடித்த பிறகு பட்டப் படிப்பில் சேர அவர் விரும்பினார். அதனால் 1982 – ஆம் ஆண்டு, சூன் மாதம், பட்டுக்கோட்டை அருகிலுள்ள அதிராம்பட்டினத்தில் இயங்கி வந்த காதிர் முகைதீன் கல்லூரியில் கலையியல் வாலை (B.A–History) வகுப்பில் சேர்ந்து வரலாற்றை முதன்மைப் பாடமாக எடுத்துப் படிக்கலானார் ! பட்டப்படிப்பு இறுதியாண்டுத் தேர்வை 1985 – ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் எழுதித் தேர்ச்சி பெற்றுப் பட்டதாரியும் ஆனார் !

 

கூடுதல் தகுதி பெறும் முயற்சி:

பட்டப் படிப்பு மட்டும் போதாது, கூடுதலாக வேறு சில தொழிற் படிப்புச் சான்றுகளையும் பெற்றிட வேண்டும் என்னும் ஆர்வம் உந்தப் பெற, 1992 – ஆம் ஆண்டு மே மாதம் கடலூரில் நடைபெற்ற வேளாண்மை மேனிலைத் தேர்வில் (HIGHER  EXAMINATION  IN AGRICULTURE) கலந்து கொண்டு தேர்ச்சி பெற்று அரசுத் தேர்வுகள் இயக்ககத்தால் வழங்கப் பெறும் சான்றிதழையும் பெற்றார் !

 

இதையடுத்து   03 -05 -1993 முதல் 24- 07- 1993 வரை திருச்சியில் நடைபெற்ற தொழில்நுட்ப ஆசிரியர்க்கான சான்றிதழ் களப் பயிற்சியில் கலந்து கொண்டு வேளாண் தொழில் நுட்ப மேனிலைத் தேர்வில் வெற்றி பெற்று, அரசுத் தேர்வுகள் இயக்ககம் வழங்கிய சான்றிதழைப் பெற்றுள்ளார் !

 

திரு. சுப்ரமணியன் – சாந்தி திருமணம்:

வேலைக்குச் செல்லும் தகுதி பெறும் முயற்சிகளுக்கு இடையே, பெற்றோரின் விருப்பத்திற்கிணங்க திருமணம் செய்து கொள்ளும் சூழ்நிலையும் அவருக்கு ஏற்பட்டது. பஞ்சநதிக்குளம் கீழச்சேத்தி, ஆசிரியர் திரு மு. பழனித்துரை – சரோஜினி இணையரின் மகள் செல்வி சாந்தியை  திரு சுப்ரமணியன் கரம் பிடித்து மனைவியாக்கிக் கொண்டார். இவர்கள் திருமணம், கருப்பம்புலம் திரு. பி.வி.தேவர் திருமண அரங்கில் 1996 – ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம், 08 – ஆம் நாள் (8-9-1996) உற்றார் உறவினர் புடை சூழ இனிது நடைபெற்றது ! செல்வி சாந்தி 1977 – ஆம் ஆண்டு மே மாதம், 01 – ஆம் நாள் (01-05-1977)  பிறந்தவர்; +2 வரைப் படித்தவர் !

 

GHCL - பணியில் சேரல்:

திருமணம் ஆனபிறகு  அடுத்த ஓரிரு ஆண்டுகள் பல்வேறு வேலைகளுக்கு திரு சுப்ரமணியன் முயற்சி செய்தார். இறுதியில், கடிநெல்வயலில் இயங்கிவரும் குஜராத் மிகு வேதிப் பொருள் நிறுவனத் தொழிலகத்தில் (GUJARATH HEAVY CHEMICALS LIMITTED) தொழில் நுட்ப வினைஞனராக (TECHNICIAN)  2000 – ஆம் ஆண்டு மே மாதம் 01 – ஆம் நாள் (01-05-2000)  பணியில் சேர்ந்தார். இவரது பணிநிலையை இந்நிறுவனம் 2007 – ஆம் ஆண்டு நிலைப் பணியாக (PERMANENT) அறிவித்தது !

 

சுனில் நந்தா பிறப்பு:

திரு. சுப்ரமணியன் – சாந்தி இணையருக்கு 1997 – ஆம் ஆண்டு, நவம்பர் மாதம், 04 – ஆம் நாள்  (04-11-1997) ஒரு ஆண் மகவு பிறந்தது. இக்குழந்தைக்கு சுனில் நந்தா என்று பெயர் சூட்டி வளர்த்து வந்தனர் !

 

சுனில் நந்தாவின்  தொடக்கக் கல்வி:

திரு.சுனில் நந்தா  L.K.G, U,K.G, மற்றும்  1- ஆம் வகுப்பு முதல்  08 -  ஆம் வகுப்பு வரையிலான தொடக்க நிலை மற்றும்  இடைநிலைக்  கல்வியை, (2003 – 2011) வேதாரணியத்தில் இயங்கி வரும்  புனித அந்தோணியார் பதின்ம மேனிலைப் பள்ளியில் பயின்றார் !

 

உயர்நிலப் பள்ளிக் கல்வி:

அடுத்து 09 – ஆம் வகுப்பு முதல் 10 - ஆம் வகுப்பு வரையிலான உயர்நிலைப் பள்ளிக் கல்வியை (2011 – 2013)  ஆயக்காரன்புலத்தில் இயங்கி வரும் இரா.நடேசனார் அரசு உயர்நிலைப் பள்ளியில் பயின்றார்.  10 -ஆம் வகுப்பு இறுதித் தேர்வில் 500 – க்கு 490 மதிப்பெண்கள் (98%) பெற்று பள்ளி முதல் மாணவனாகத் தேர்ச்சி பெற்றார் !

 

மேனிலைப் பள்ளிக் கல்வி:

அடுத்த நிலையான மேனிலைப் பள்ளிக் கல்வியை -  +1 மற்றும், +2 வகுப்புப் படிப்புகளை (2013 – 2015)  - திருச்சி மாவட்டம், துறையூரில் உள்ள சௌடாம்பிகா பதின்ம மேனிலைப் பள்ளியில் மேற்கொண்டார். +2 இறுதித் தேர்வில் 1200 – க்கு 1122 மதிப்பெண்கள் (93.5%) பெற்று அனைவரின் பாராட்டுதல்களையும் பெற்றார் !

 

பொறியியல் கல்வி:

விளையும்  பயிர் முளையிலேயே தெரியும்  என்னும் முது மொழிக்கு ஏற்ப இளமையிலேயே படிப்பில் படு சுட்டியாக விளங்கிய  திரு சுனில் நந்தா,  அடுத்து 2015 -ஆம் ஆண்டு சூன் மாதம் சென்னையில் உள்ள ஈஸ்வரி பொறியியல் கல்லூரியில் சேர்ந்து எந்திரப் பொறியியல் பிரிவில் (MECHANICAL ENGINEERING) நான்காண்டுகள் (2015–2019) படித்து, பொறியியல் வாலை (B.E) பட்டம் பெற்றார் !

 

புதிதாக  மாடி வீடு கட்டல்:

திரு சுப்ரமணியன் – சாந்தி இணையர் குடியிருந்து வந்த ஓட்டு வீடு அவரது பெரியப்பா திரு. கா.இருளப்ப  தேவர் அவர்கள் தனது 18 – ஆவது அகவையில் – அதாவது – 1950 – ஆம் ஆண்டு – கட்டிய வீடு. கிழக்குப் பார்த்த அந்த வீட்டில் நுழைந்தவுடன் தெற்கு வடக்கில் ஆளோடி, அடுத்து திண்ணை, திண்ணையின் தென்புறமும், வடபுறமும்  கசாலை எனப்படும் 12’ X  8’ அளவுள்ள அறைகள், இரு அறைகளிலும் கிழக்குப் பார்த்த சன்னல்கள்,  திண்ணையை அடுத்து உள்ளே சென்றால் அகலமான கூடம், கூடத்தின் தென்பக்கமாக 10 அடி உயர மரப் பத்தாயம், கூடத்தை அடுத்து உள்ளே தெற்கு வடக்கு நீள வாக்கில் ஆளோடி போன்றதொரு புறக்கட்டு, அதன் இரு புறமும் கிழக்கு மேற்கு நீள வாக்கில் ஆரல் எனப்படும் சமையலறைகள், 1950 வாக்கில் கட்டப்பெற்ற அந்த வீட்டை – 70 ஆண்டுகள் பழமையான வீட்டை – 2021 – ஆம் ஆண்டு செப்டம்பர்  மாதம் 15-ஆம் நாள்  (15-09-2021) (பிலவ ஆண்டு, ஆவணி மாதம் 30 - ஆம் நாள் புதன் கிழமை) இடித்து அகற்றிவிட்டு அந்த இடத்தில் மாடி வீடு கட்ட மனை போட்டார் திரு.சுப்ரமணியன் !

 

ஒப்பந்தக்காரர் மூலம் ஒரே ஆண்டில் அதைச் செயல்படுத்தியும்விட்டார்.  2023 -ஆம் ஆண்டில் கட்டப்பெற்ற புதிய  வீட்டின் புதுமனை புகு விழா 2023 – ஆம் ஆண்டு, மார்ச்சு மாதம் 03 – ஆம் நாள் (03-03-2023) நடைபெற்றது. கட்டப்பெற்ற புதிய வீட்டின் படத்தை இக்கட்டுரையின் இறுதியில் இணைத்துள்ளேன். 70 ஆண்டு காலம் திரு இருளப்ப தேவரின் குடும்பத்திற்கு ஆலமரமாய் விளங்கி, 2021 – ஆம் ஆண்டு  இடிக்கப்பெற்ற பழமையான அந்த வீட்டின் படத்தையும் இணைத்திருக்கிறேன் ! பார்த்து மகிழுங்கள் !

 

எங்கே அந்த வீடு ?

உறவுக்காரப் பறவையான கே.எஸ். நடேச தேவர், தாய்ப் பறவையான மாரிமுத்து அம்மையார், பிள்ளைப் பறவைகளான கா.இருளப்ப தேவர், கா.நடராச தேவர், கா.செகதாம்பாள் அம்மையார், வாழவந்த பறவைகளான இ.இராஜம் அம்மையார், ந.அலர்மேல் மங்கை அம்மையார், இளம் பறவைகளான இ.இராமலிங்கம், ந.சுப்ரமணியன், ந.காசிநாதன், ந.தமிழ்ச்செல்வி எனப் பல பறவைகள் வாழ்ந்த வீடு, பேசிப் பேசி மகிழ்ந்த வீடு, படுத்து உறங்கிய வீடு-  நேற்றுவரை  இருந்தது; இன்று இல்லை ! “பழையன கழிதலும் புதியன புகுதலும், வழுவல, கால வகையினானே” என்ற நன்னூல் நூற்பாவின் பொருள் இதுதானோ ?

 

சுனில் நந்தாவுக்கு அஞ்சல் துறை வேலை வாய்ப்பு:

பொறியியல் பட்டம் பெற்றபின் குறுகிய கால இடைவெளியில் (2020)  அவருக்கு அஞ்சல் துறையில்  ஊரக அஞ்சலக மேலவர் (RURAL POST MASTER) பணி கிடைத்தது. இடையூர் - சங்கேந்தியை அடுத்த தேவதானம், வேதாரணியத்தை அடுத்த ஆதனூர் ஆகிய இடங்களில் பணி புரிந்தார் !

 

ஆயுள் காப்பீட்டுக் கழக வேலை வாய்ப்பு:

அடுத்து, ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் வளர்ச்சி அதிகாரியாகப் பணி வாய்ப்புக் கிடைத்தது. 2023 ஆம் ஆண்டு முதல் திரு சுனில்நந்தா இப்பணியை ஏற்று வேதாரணியத்தைத் தலைமை இடமாகக் கொண்டு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார் !

 

சுனில் நந்தா – பொன்மொழி திருமணம்:

திரு சுனில் நந்தாவுக்குத் திருமணம் செய்து வைத்திட அவரது பெற்றோர் முடிவு செய்து அதற்கான முயற்சிகளில் இறங்கினர். இறுதியில், ஆயக்காரன் புலம் – 2 – ஆம் சேத்தி, சாந்தான்வெளி பகுதியைச் சேர்ந்த திரு. இர.திருமாறன் – தி.ஜானகி இணையரின் மகள் செல்வி பொன்மொழியைத் தேர்வு செய்தனர். இவர்கள் திருமணம் 2023 – ஆம் ஆண்டு, ஆகஸ்டு மாதம், 20 – ஆம் நாள் (20-08-2023) ஆயக்காரன்புலம் காசி வீரம்மாள் திருமண மண்டபத்தில் உற்றார் உறவினர்கள் புடை சூழ மிகச்சிறப்பாக நடைபெற்றது.  1998 – ஆம் ஆண்டு சூன் மாதம், 25 – ஆம் நாள் (25-06-1998)  பிறந்த,  மணமகள் பொன்மொழி, B.Sc., M.B.A பட்டதாரி !

 

பெயர்த்தி பிறப்பு:

திரு சுப்ரமணியன் – சாந்தி இணையருக்கு, 2024 – ஆம் ஆண்டு, ஆகஸ்டு மாதம், 18 – ஆம் நாள் (18-08-2024) பெயர்த்தி பிறந்தாள். குழந்தைக்கு ஸ்மிர்த்தி (SMIRTHI) என்று பெயரிட்டு அழைத்து வரும் திரு சுப்ரமணியன் – சாந்தி இணையருக்கும், பெற்றோரான திரு சுனில் நந்தா – திருமதி பொன்மொழி இணையருக்கும் நமது நல் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வோம் !

 

மறைந்தவர்களை மறக்கவியலாது !

(01).சனக்குடி எஸ்.குழந்தைவேல் பிள்ளை மறைவு:

திரு சுப்பிரமணியனின் அத்தை  திருமதி செகதாம்பாளின் கணவர் திரு. எஸ்.குழந்தைவேல் பிள்ளை அவர்கள், 1974 – ஆம் ஆண்டு, ஆகஸ்டு மாதம், 25 – ஆம் நாள் (25-08-1974)  காலமானார். அரிமா (சிங்கம்) போல் பார்வையும் கம்பீரமான தோற்றமும் கொண்ட அவர் இறந்து 52 ஆண்டுகளாகியும் அவர் என் கண்ணுக்குள் இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கிறார் !

 

(02).பாட்டி மாரிமுத்து அம்மையார் மறைவு:

திரு சுப்ரமணியனின் தந்தை வழிப் பாட்டியார் – வெள்ளைப் புடவை கட்டிக்கொண்டு பழைய வீட்டின் தெற்குக் கசாலையில் சிறிய அளவில் மளிகைக்கடை நடத்தி வந்த பாட்டியார் – மாரிமுத்து அம்மையார், 1995 – ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம், 27 – ஆம் நாள் (27-02-1995) இரு மகன்கள், மருமகள்கள், பெயரன், பெயர்த்தி அனைவரையும் விட்டுவிட்டு இவ்வுலக வாழ்வை நீத்தார் ! பிள்ளைப் பறவைகளை விட்டுவிட்டுத் தாய்ப்பறவை பறந்துவிட்டது !

 

(03) கருப்பம்புலம்  அத்தான்  திரு. ந.சிவானந்தம் மறைவு:

திரு கா.நடராச தேவரின் மருமகனும் திரு. சுப்ரமணியனின் தங்கை கணவருமான கருப்பம்புலம் ந.சிவானந்தம் M.A., B.Ed., அவர்கள் 2014 – ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம், 03 – ஆம் நாள்  (03-09-2014)  உற்றார் உறவினர்கள் அனைவரையும் துன்பக் கடலில் தள்ளிவிட்டு, அவர் மட்டும் மீளாத் துயிலில் ஆழ்ந்து போனார். என் மீது கொள்ளை அன்பும் மதிப்பும்  வைத்திருந்த அவர்  மறைந்துவிட்டர் என்பதை என்னால் இன்றும் கூட நம்பமுடியவில்லை !

 

(04).பெரியப்பா திரு.இருளப்ப தேவர் மறைவு:

திரு சுப்ரமணியனின் பெரியப்பாவும் கடிநெல்வயலின் மேனாள்  கிராம அதிகாரியுமான திரு. கா.இருளப்ப தேவர் அவர்கள் 2016 – ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம், 30 – ஆம் நாள் (30-09-2016) தனது 86 – ஆவது வயதில் ஈசனக்குடியில் உள்ள அவரது மகன் வீட்டில் காலமானார் ! கடிநெல்வயலில் தனது 18 – ஆம் அகவையில் சொந்தமாக வீடுகட்டி வாழ்ந்து காட்டிய  தலைமகன், ஊராரையும் உற்றார் உறவினர்களையும் துன்பத்தில் தவிக்க விட்டுவிட்டுப் பறந்துவிட்டார் !

 

(05).தாயார் திருமதி அலர்மேல் மங்கை மறைவு:

திரு சுப்ரமணியனின் தாயார் திருமதி அலர்மேல் மங்கை சில மாதங்களாக உடல்நலமின்றி வாழ்ந்து வந்தார். தன்னுடைய நலக்குறைவை எதிர்த்துப் போராட அவருக்கு வலுக் குறைந்து கொண்டே வந்தது. மருமகள் சாந்தி, பெற்ற மகளைப் போல தன் மாமியாரைக் கவனித்துக் கொண்டு  வந்தார். எனினும், இறுதியில் 2022 – ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம், 08 – ஆம் நாள் (08-02-2022)  தந்தை திரு கா.நடராச தேவரின் குலவிளக்கு  ஒளியிழந்து அணைந்து போனது.  “நெருநல் உளன் ஒருவன், இன்றில்லை என்னும் பெருமை படைத்து இவ்வுலகு” என்பது வள்ளுவர் வாக்கு !

 

(06).அத்தை திருமதி செகதாம்பாள் அம்மையார் மறைவு.

திரு. சுப்ரமணியனின் ஒரே அத்தை ஈசனக்குடி திருமதி கு.செகதாம்பாள் அம்மையார் அவர்கள் 2023 – ஆம் ஆண்டு, மே மாதம், 26 – ஆம் நாள் (26-05-2023) தனது 89-ஆம் அகவையில் காலமானார். 1952 -ஆம் ஆண்டு புயலின் போது, கோமளப் பேட்டையில் சிக்கிக்கொண்ட என்னைப் பாதுகாக்க அவர் பட்டபாடு இன்றும் என் நினைவில் பசுமையாக இருக்கிறது.  இந்தப்பாசப்  பறவையும் பறந்து போய்விட்டது !


(07).பெரியம்மா இராஜம் அமையார் மறைவு:

கடிநெல்வயல் பங்காளிகள் அனவரையும் தன் அன்பால் கட்டிப் போட்டிருந்த பெரியம்மா - திரு சுப்ரமணியனின் பெரிய தாயார் -  திருமதி இராஜம் அம்மையார், 2026 – ஆம் ஆண்டு, சனவரி மாதம், 19 – ஆம் நாள் (19-01-2026) இப்பூவுலக வாழ்வை நீத்தார். இவ்வுலகில் வாழ்ந்தது போதும் என்று நினைத்து, கிளி பறந்துவிட்டது போலும் !

 

நிறைவுரை:

ஒரு மனிதனின் வாழ்க்கை வரலாறு என்பது அவனைப் பிற்காலத் தலைமுறையினருக்கு உள்ளது உள்ளபடிப் படம் பிடித்துக் காட்டும் ஒரு உயரிய முயற்சி. இந்த முயற்சியைச் செய்வதில், இந்தக் கட்டுரையை உருவாக்கிய வை.வேதரெத்தினமாகிய   எனக்கு மிகுந்த மன மகிழ்ச்சியும் மன நிறைவும் கிடைக்கிறது. திரு சுப்ரமணியன் தனது வாழ்வின் முற்பகுதியில் பல இன்னல்களுக்கு ஆட்பட்டவர். அவரது வாழ்வின் இடைப்பகுதியும், பிற்பகுதியும் மகிழ்ச்சிக்குக் குறைவில்லாமல் வளமுடனும் நலமுடனும் அமையும் என்று எதிர்பார்ப்போம் – வாழ்த்துவோம்! 

=========================================================

திரு.ந.சுப்ரமணியன் வாழ்கையின் முகாமையான  

நிகழ்வுகள்.

========================================================

23-05-1963: திரு சுப்ரமணியன் பிறப்பு.

00-10-1969: கடிநெல்வயல் பள்ளியில் 1-ஆம் வகுப்பில் சேரல்.

00-06-1974: கருப்பம்புலம் பள்ளியில் 6-ஆம் வகுப்பில் சேரல்.

25-08-1974: ஈசனக்குடி திரு. குழந்தைவேல் பிள்ளை மறைவு.

00-06-1977: வேதாரணியம் பள்ளியில் 9-ஆம் வகுப்பில் சேரல்.

00-04-1982. +2 வகுப்பில் தேர்ச்சி.

00-06-1982: கல்லூரியில் பட்டப்படிப்பில் சேரல்.

00-04-1985: B.A (His) பட்டப் படிப்பில் தேர்ச்சி.

00-05-1992: வேளாண்மை மேனிலைத் தேர்வில் தேர்ச்சி.

24-07-1993: தொழில் நுட்ப ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி.

27-02-1995: பாட்டி மாரிமுத்து அம்மையார் மறைவு.

08-09-1996: திரு.சுப்ரமணியன் – சாந்தி திருமணம்.

04-11-1997: மகன் சுனில் நந்தா பிறப்பு.

01-05-2000: GHCL – அன்னிலைப் பணியில் சேரல்.

00-00-2007: GHCL – நிறுவனத்தில் பணி நிரந்தரம்.

03-09-2014: கருப்பம்புலம் திரு.ந.சிவானந்தம் மறைவு.

30-09-2016: பெரியப்பா திரு.கா.இருளப்ப தேவர் மறைவு.

00-07-2019: சுனில் நந்தா B.E.பட்டம் பெறுதல்.

00-00-2020: சுனில் நந்தா அஞ்சல் துறையில் பணியேற்பு.

15-09-2021: திரு இருளப்ப தேவர் கட்டிய பழைய வீடு இடிக்கப்பட்ட நாள்

08-02-2022: தாயார் திருமதி. அலர்மேல் மங்கை மறைவு.

03-03-2023: புதிதாக மாடி வீடு கட்டி புதுமனை புகுவிழா நடத்தல்.

00-00-2023: சுனில் நந்தா  L.I.C – யில் பணியேற்பு.

26-05-2023: அத்தை செகதாம்பாள் அம்மையார் மறைவு.

20-08-2023: சுனில் நந்தா – பொன்மொழி திருமணம்.

18-08-2024: பெயர்த்தி ஸ்மிர்த்தி பிறப்பு.

19-01-2026: பெரியம்மா இராஜம் அம்மையார் மறைவு.

======================================================

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(vedarethinam76@gmail.com)

ஆட்சியர்,

“தமிழ்நட்பு” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2057, மீனம் (பங்குனி) 24]

{07-04-2026}

----------------------------------------------------------------------------------------------------

திரு.ந.சுப்ரமணியன்



திரு.ந.சுப்ரமணியன்




திருமதி. சு.சாந்தி சுப்ரமணியன்

திருமதி. சு.சாந்தி சுப்ரமணியன்



திருமதி சு.சாந்தி, திரு சுனில் நந்தா, திரு.ந.சுப்ரமணியன்

திரு சுனில் நந்தா



திரு சுனில் நந்தா & திருமதி பொன்மொழி



பவித்திரா, பொன்மொழி, சுனில், திலீபன்.



ஸ்மிர்த்தி



திருமதி அலர்மேல்மங்கை & திரு.கா.நடராசன்



திரு.கா.நடராசன்



திருமதி அலர்மேல் மங்கை நடராசன்

திரு.இ.இராமலிங்கம் & ஸ்ரீநாத் இராமலிங்கம்


திரு.ந.சிவானந்தம்




திருமதி தமிழ்ச்செல்வி சிவானந்தம்



திரு.திலீபன் - பவித்திரா இணையர்

கா.இருளப்ப தேவர்

இ.இராசம் அம்மையார்

இ.இராமலிங்கம்


இரா.திலகவதி இராமலிங்கம்

கு.குழந்தைவேல் பிள்ளை



செகதாம்பாள் குழந்தைவேல் பிள்ளை

கா.மாரிமுத்து அம்மையார்

சரோஜினி & பழனித்துரை இணையர்

திரு.சுப்ரமணியன் பிறந்த 70 ஆண்டு பழமையான வீடு. 2021-ல் இடிக்கப்பட்டது.

திரு.சுப்ரமணியன் (2023-ல் கட்டிய ) இப்போது வாழும் வீடு.




(15) பொன்னேரி (திரு) கனகராசனின் வாழ்க்கை வரலாறு !


பொன்னேரி திரு ச.கனகராசன் வாழ்க்கை வரலாறு !

திரு.ச.கனகராசன்

முகவுரை.

என்னுடைய  தந்தை வழித் தாத்தா திரு. சிங்காருத் தேவரின் அண்ணன் பெயரனும்,  கடிநெல்வயல் கீழக்காட்டில் பிறந்து வளர்ந்து,  சென்னையில் பணிபுரிந்து இப்பொழுது திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வாழ்ந்து வருபவருமான தம்பி ச.கனகராசனின்  வாழ்க்கை வரலாறு இன்று இணையத்தில் பதிவேற்றப்படுகிறது. வலைப்பூ (BLOG)  எனப்படும் இந்த இணையப் பதிவேற்றம், ஆயிரம் ஆண்டுகளானாலும் அழியாதது; யாராலும் அழிக்கவோ, திருத்தம் செய்யவோ,  எதையும் கூட்டவோ குறைக்கவோ முடியாதது. இந்தப் பக்கத்தைத் திறந்து பார்க்க யார் விரும்பினாலும்   https://thamizhnatpu.blogspot.com  என்று உள்ளீடு (TYPE) செய்து  "தேடுக" (SEARCH)  என்பதைச் சொடுக்கினால் ஐந்தாறு வரிகள்  உங்கள் முன் ஓடிவந்து நிற்கும். அதிலிருந்து  "தமிழ் நட்பு" என்று காணப்படும்  வரியைச் சொடுக்குங்கள்.  அவ்வளவுதான்!  "தமிழ் நட்பு வலைப்பூப் பக்கம்"  திறந்து கொள்ளும்.  அடுத்து  நீங்கள் விரும்பும் ஆளிநரின்  (PERSON) வாழ்க்கை வரலாற்றைப் படிக்கத் தொடங்கலாம் !

 

பஞ்சநதிக் குளத்தார் புரம் என்னும் கொடி !

நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரணியம் வட்டம், 123, வருவாய் ஊரகம் கடிநெல்வயல் என்னும் ஊரில் கீழக்காடு, பஞ்சநதிக் குளத்தார் புரத்தைச்  சேர்ந்தவர் மாரியப்ப தேவர். இவரது மகன்  நல்லபொதிய தேவர். நல்லபொதிய தேவரின் மகன்கள் திரு சீனிவாச தேவர் மற்றும் திரு சிங்காருத் தேவர். திரு.சீனிவாச தேவர் நீலாம்பாள் என்னும் மங்கையை மணந்து கொண்டார். திரு சிங்காருத் தேவர் பிரகதாம்பாள் என்னும் மங்கை நல்லாளைத் திருமணம் செய்து கொண்டார். திரு சீனிவாச தேவருக்கு மூன்று பிள்ளைகள்.  மூத்தவர் திரு அருணாச்சல தேவர்; அடுத்தவர்  திரு.சாம்பசிவ தேவர்; கடைசிப் பிள்ளை திரு  சண்முகவேல் தேவர் ! திரு சண்முகவேல் தேவர் இல்லத்தில் மலர்ந்த நறுமண  மலர் தான்  திரு கனகராசன் !

 

(கடிநெல்வயல் முன்பு தஞ்சாவூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி வட்டத்தில் ஒரு சிற்றூராகத் திகழ்ந்து வந்தது!)

 

தந்தை வழிக் குலக்கொடி: 

மாரியப்ப தேவர்  >  நல்லபொதிய தேவர்  >  சீனிவாச தேவர் / நீலாம்பாள் அம்மையார்  >  சண்முகவேல் தேவர் / பஞ்சரத்தினம் அம்மையார்  >  கனகராசன் /  (மனைவி)  சுமதி.

 

தாய் வழிக் குலக் கொடி: 

இராமச்சந்திர தேவர் >பிச்சையாத் தேவர் / சீதாலட்சுமி  அம்மையார்   > (மகள்) பஞ்சரத்தினம் அம்மையார்  / (கணவர்) சண்முகவேல் தேவர்  >  கனகராசன் / (மனைவி)  சுமதி. 

 

திரு சண்முகவேல் தேவர்  பஞ்சரத்தினம் அம்மையார் 

இணையர் திருமணம் !

திரு சீனிவாச தேவரின் மூத்த மகன் திரு. அருணாச்சல தேவர், திருத்துறைப் பூண்டியை அடுத்த வேளுர் சிவப்பிரகாச தேவர் – கல்யாணி அம்மையாரின் மூத்த மகள் செல்வி மீனாட்சியைத் திருமணம் செய்துகொண்டார். இளையவரான திரு.சாம்பசிவ தேவர், பஞ்சநதிக்குளம்  சின்னகாரியக்காடு திரு கந்தசாமித் தேவரின் அண்ணன் திரு சிங்காரவேல் தேவரின் மகளான செல்வி வீரம்மாளைத் திருமணம் செய்துகொண்டார்.   கடைசிப் பிள்ளையான திரு சண்முகவேல் தேவர்  அப்போது கடிநெல்வயல் கீழக்காட்டில் வாழ்ந்து வந்த திரு க. பிச்சையாத் தேவர் – சீதையம்மாள் இணையரின் இரண்டாவது மகளான செல்வி பஞ்சரத்தினம் என்பவரை  1942 -ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார் !

 

திரு  சண்முகவேல்  தேவரின்  வாழ்க்கைப் பணி !

திரு.சண்முகவேல் தேவர், தனது தாத்தா திரு நல்லபொதிய தேவர் மற்றும் தந்தை திரு.சீனிவாசத் தேவர் ஆகியோரின் வழிவந்த குடும்பச் சொத்தான வேளாண் நிலங்களில், தனது அண்ணன்மார் திரு அருணாச்சலத் தேவர், திரு சாம்பசிவத் தேவர் ஆகியோருடன், தொடக்கத்தில் இணைந்து கூட்டாக வேளாண்மை செய்து வந்தார். பிற்காலத்தில் அண்ணன்மாருடன் பாகப் பிரிவினை ஆனபின்பு, தனது பங்காகக் கிடைத்த நன்செய், புன்செய் நிலங்களில் தனியாக வேளாண்மை செய்வதில் கவனம் செலுத்தி வந்தார் !

 

திரு சண்முகவேல் பஞ்சரத்தினம் இணையரின் குழந்தைகள் !

திரு சண்முகவேல் பஞ்சரத்தினம் இணையருக்கு  மூன்று ஆண்  குழந்தைகள்  பிறந்தனர்.  சதாசிவம், செயராமன், கனகராசன் என்று அவர்களுக்குப் பெயரிட்டு வளர்த்து வந்தனர்.  தலைச்சன் பிள்ளையான திரு சதாசிவம் 1947 -ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 10 -ஆம் நாள் (10-04-1947) பிறந்தார். இரண்டாவது பிள்ளையான திரு செயராமன்  1952 - ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 29 -ஆம் நாள் (29-12-1952)  (நந்தன ஆண்டு மார்கழி மாதம், 15 -ஆம் நாள், திங்கள் கிழமை, உரோகிணி விண்மீன் நிலவிய நாளில்)  பிறந்தார். மூன்றாவது பிள்ளையான திரு கனகராசன் 1954 -ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம், 09 - ஆம் நாள் (9-12-1954) (சய ஆண்டு, கார்த்திகை மாதம், 24 -ஆம் நாள்)  வியாழக்கிழமை உரோகிணி விண்மீன் நிலவிய நன்னாளில்) பிறந்தார் !

 

திரு. கனகராசனின் கல்விப் பயணம்  !

தொடக்கக் கல்வி:

திரு கனகராசன், 1962 -ஆம் ஆண்டு, ஆகஸ்டு மாதம் கடிநெல்வயலில் உள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பில் சேர்ந்து தனது கல்விப் பயணத்திற்குப் பிள்ளையார் சுழி போட்டார். தொடர்ந்து ஐந்தாம் வகுப்பு வரை அங்கேயே படித்து மேற்படிப்புக்காக ஏப்பிரல் 1967 -ல் அங்கிருந்து வெளியேறினார்.

 

இடைநிலை & உயர் நிலைக் கல்வி:

கடிநெல்வயல் தொடக்கப் பள்ளியிலிருந்து விடுபட்டு, தனது மேற்படிப்பை முன்னிட்டு, கருப்பம்புலத்தில் உள்ள பி.வி.தேவர் நடுநிலைப் பள்ளியில்  06 - ஆம் வகுப்பில் 1967 – ஆம் ஆண்டு சூன் மாதம் சேர்ந்தார். 08 - ஆம் வகுப்பு வரை அங்கேயே படித்த அவர், அதை நிறைவு செய்தபின், அங்கிருந்து விடுபட்டு, வேதாரணியத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 1969 – ஆம் ஆண்டு சூன் மாதம்  09 - ஆம் வகுப்பில் சேர்ந்தார். 10, மற்றும் 11 – ஆம் வகுப்புப் படிப்புகளை அதே பள்ளியில் தொடர்ந்த அவர், பள்ளியிறுதி வகுப்பான 11 – ஆம் வகுப்புத் தேர்வை 1974 – ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் எழுதித் தேர்ச்சி பெற்றார் !

 

தந்தை  திரு.சண்முகவேல்  தேவர் மறைவு:

திரு கனகராசன் வேதாரணியம் பள்ளியில் பத்தாம் வகுப்பில் படித்துக் கொண்டிருக்கும் போது – அதாவது 1970 – ஆம் ஆண்டு சூலை மாதம் - அவரது தந்தை திரு சண்முகவேல் தேவர் காலமானார். இளமைக் காலத்தில் தந்தையை இழப்பது என்பது கொடுமையானது. இத்தகைய துன்பத்தை திரு கனகராசனும் அனுபவித்திருக்கிறார் !

 

தேவூர் மாமா உணவகத்தில் தொழில் கற்றல்:

பள்ளியிறுதி வகுப்பில் தேர்ச்சி பெற்ற பின்பு அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் திகைப்புற்றுத் தேங்கி நிற்கையில், கனகராசனின் தாய்மாமாவான  K.P.M எனப்படும் திரு க.பி.முருகையாத் தேவர், திரு கனகராசனுக்கு ஒரு அறிவுரை சொன்னார். நாகப்பட்டினம் அருகிலுள்ள தேவூரில்  உணவு விடுதி (HOTEL) தொடங்கி, வெற்றிகரமாக நடத்திவந்த என் தாய்மாமா திரு சி,பண்டரிநாதன் அவர்களின் உணவு விடுதியில் வேலைக்குச் சேர்ந்து தொழில் கற்றுக்கொண்டால் எதிர்காலத்திற்குப் பயான்படும்  என்பதே அந்தக் கருத்துரை. அவரது  அறிவுரைப்படி, திரு. கனகராசன் 1975-ஆம் ஆண்டு தேவூர் மாமா உணவு விடுதியில் வேலைக்குச் சேர்ந்தார். ஈராண்டுகள் அங்கு பணிபுரிந்து உணவகத் தொழிலை ஓரளவுக்குக் கற்றுக்கொண்டார் !

 

அண்ணன் வேதரெத்தினம் அவர்களின் அறிவுரை:

திரு கனகராசனை ஒருமுறை சந்தித்த நான் (வை.வேதரெத்தினம்) பள்ளியிறுதி வகுப்பு வரைப் படித்த அவரை, நாகப்பட்டினம் அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் ஏதாவதொரு தொழிற் பிரிவில் சேர்ந்து, தொழிற் கல்வி பயிலும்படியும், அதற்கான ஏற்பாடுகளை நான் செய்கிறேன் என்றும் வாக்குறுதி தந்தேன். அப்பொழுது நான் நாகையில்  (1975 – 1981) பண்டகக் காப்பாளராக (STORE KEEPER) பணி புரிந்து வந்தேன் !

 

நாகை தொழிற் பயிற்சி நிலயத்தில் சேரல்:

நான் வாக்களித்தபடி திரு கனகராசனை 1977 -ஆம் ஆண்டு, ஆகஸ்டு மாதம், நாகப்பட்டினம் அரசினர் தொழிற்பயிற்சி நிலயத்தில் “வார்ப்பியல்” (MOULDER) பிரிவில் சேர்த்துவிட்டேன். அத்துடன் பயிற்சி நிலைய மாணவர் விடுதியிலும் (HOSTEL) இடம் கிடைக்கச் செய்தேன். மாணவர் விடுதியில் திரு. கனகராசன் சொந்தமாகச் சமைத்துச் சாப்பிட்டு வந்தார் !

 

பயிற்சி நிறைவு:

வார்ப்பியல் தொழிற் பிரிவில் ஓராண்டுப் பயிற்சி நிறைவடைந்து 1978 -ஆம் ஆண்டு சூலை மாதம் திரு.கனகராசன் அகில இந்தியத் தொழிற் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றுத் தேர்ச்சி அடைந்தார் !

 

பழகுநர் பயிற்சியில் சேரல்:

அகில இந்தியத் தொழிற் தேர்வினை அடுத்து, பழகுநர் பயிற்சி பெற்றிட  வேண்டும். சென்னை, திருவொற்றியூரில் உள்ள K.C.P. LIMITED என்னும் தொழிற்சாலையில் பழகுநர் பயிற்சிக்குத் தகுதியான மாணவர்கள் பட்டியல்  அனுப்புமாறு நாகப்பட்டினம் தொழிற்பயிற்சி நிலைய முதல்வரிடம் கேட்கப்பட்டிருந்தது.    அனுப்பவிருந்த பட்டியலில்  திரு.கனகராசனுக்கு இடம் கிடைக்கவில்லை. தட்டச்சரிடம் சொல்லி பட்டியலில் திரு கனகராசன் பெயர் இடம் பெறச் செய்தேன். எப்படிச் செய்தேன், என்ன செய்தேன் என்பதை இங்கு விவரிக்க இயலாது. K.C.P. LIMITED தொழிலகத்தில் இடம் கிடைத்து, அங்கு 09-09-1978 முதல் 14.03.1980 வரை பழகுநர் பயிற்சியை மேற்கொண்டு திரு.கனகராசன் அதை வெற்றிகரமாக நிறைவு செய்தார் !

 

வேலை தேடும் படலம் தொடங்கியது:

வார்ப்பியல் தொழிலில் அடிப்படைப் பயிற்சி, பழகுநர் பயிற்சி எல்லாம் முடிந்துவிட்டது. இனி நிலைத் தன்மையுடைய வேலை வாய்ப்பைத் தேடவேண்டும் என்ற  சந்திப்பில் நின்றுகொண்டு  நாலாபுறமும் கண்களைச் சுழற்றித் தேடத் தொடங்கினார். கடுமையான தேடல்; விடாமுயற்சியுடைய தேடல்.முயற்சியுடையார் இகழ்ச்சியடையார் அல்லவா? அதன்விளைவாக திரு.கனகராசனுக்குக் கிடைத்த வேலைவாய்ப்புகள் இதோ:-

 

(01) .சிவானந்தா ஸ்டீல்ஸ், (SIVANANTHA STEELS) தொழிற்பேட்டை, அம்பத்தூர், சென்னை. ஆகஸ்டு 1980 முதல் 1981 வரை = 13 மாதங்கள்.

(02) சதர்ன் கேஸ்டிங்ஸ் (SOUTHERN CASTINGS) மறைமலை, நகர், செங்கை மாவட்டம் – SUPERVISOR – செப்டம்பர் 1981 முதல் பிப்ரவரி 1983 வரை = 18 மாதங்கள்

(03) .சிவானந்தா ஸ்டீல்ஸ், (SIVANANTHA STEELS) தொழிற்பேட்டை, அம்பத்தூர், சென்னை- மார்ச்சு 1983 முதல் ஏப்பிரல் 1985 வரை = 26 மாதங்கள்.

(04) .நெல்காஸ்ட் (NELCAST LTD.) கூடூர், ஆந்திர மாநிலம் – SUPERVISOR – மே 1985 முதல் செப்டம்பர் 2004 வரை = 19 ஆண்டு, 5 மாதம்.

(05) பயோனியர் அல்லாய் கேஸ்டிங்க்ஸ் (PIONEER ALLOY CASTINGS LTD) சிப்காட், கும்மிடிப் பூண்டி – ASSISTANT MANAGER – அக்டோபர் 2004 முதல் நவம்பர் 2006 வரை = 02 ஆண்டு 4 மாதம்.

(06) .நெல்காஸ்ட் (NELCAST LTD.) பொன்னேரி, திருவள்ளூர் மாவட்டம் – நவம்பர் 2006 முதல்  அக்டோபர் 2009 வரை = 03 ஆண்டுகள்.

(07) ஜெ.கே.எம். ஃபெரோடெக் லிட் (J.K.M.FERRO TECH LTD) சிப்காட், கும்மிடிப் பூண்டி- சனவரி 2010 முதல் ஆகஸ்டு 2012 வரை. = 02 ஆண்டு,08 மாதம்.

(08) ஆகஸ்டு 2012 -ல் பணியிலிருந்து ஓய்வு பெற்றார்.

=======================================================

மொத்தப் பணிக்காலம் = 32 ஆண்டுகள் 02 மாதங்கள்)

============================================================

 58 -ஆம் அகவையில் – அதாவது 2012 ஆண்டு  பணியிலிருந்து ஓய்வு பெற்றாலும் பணி நீட்டிப்பு பெற்று அல்லது புதிய பணியேற்று பல்வேறு நிலைகளில் 2024 -ஆம் ஆண்டு வரை பணிபுரிந்து வந்திருக்கிறார். பணிக்காலத்தில் அவர் பட்ட துன்பங்கள் கணக்கிலடங்காது. எனினும் வாழ்க்கையில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்னும் மனதில் கொண்டிருந்த உறுதியே அவரை மேலும் மேலும் கடினமாக உழைக்கச் செய்திருக்கிறது !


திரு. கனகராசன் – செல்வி. சுமதி திருமணம்:

ஆந்திர மாநில கூடூரில்  நெல்காஸ்ட் என்னும் தொழிற்சாலையில் பணி புரிந்து வந்த காலத்தில் – அதாவது 1987 -ஆம் ஆண்டு, ஆகஸ்டு மாதம், 21 -ஆம் நாள் திரு கனகராசனுக்குத் திருமணம் நடைபெற்றது. வேதாரணியம் வட்டம், தகட்டூரில் ஒரு பகுதியான ஆதியங்காட்டில் வாழ்ந்து வந்த இவரது தாய்மாமாவான திரு.க.பி.கந்தசாமி – வெ.சரோஜா இணையரின் இரண்டாவது மகளான செல்வி சுமதிக்கு மாலையிட்டு மனைவியாக்கிக் கொண்டார். இவர்கள் திருமணம் உற்றார் உறவினர்கள் புடை சூழ திருத்துறைப் பூண்டி பிறவி மருந்தீசர் கோயில். மங்களாம்பிகா திருமண மண்டபத்தில் நடைபெற்றது !

 

குழந்தைகள்: (01) இரத்தினப் பிரியா:

திரு கனகராசன் – சுமதி இணையருக்கு இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தன.  முதற் குழந்தை 1996 – ஆம் ஆண்டு சூன் மாதம், 13 – ஆம் நாள் (13-06-1996) பிறந்தது. இக்குழந்தைக்கு இரத்தினப் பிரியா என்று பெயர் சூட்டி வளர்த்தனர். இரத்தினப்பிரியா வளர்ந்து, தகவல் தொழில் நுட்பப் பொறியியலில் வாலைப் பட்டம் (B.E–IT) பெற்று, தந்தையின் கடின உழைப்புக்குத் தகுந்த பதிலைத் தந்திருக்கிறார். 2018 – ஆம் ஆண்டு, சூன் மாதம், 05 – ஆம் நாள் (05-06-2018), ஆயக்காரன்புலம், 3 – ஆம் சேத்தி திரு கார்த்தியப்ப தேவர் – சுலோச்சனா இணையரின் மகன் திரு K.மணிகண்டன் B.E., என்பவருக்கு மாலை அணிவித்துத் தன் மணவாளன் ஆக்கிக் கொண்டார் இரத்தினப் பிரியா. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றன. இருவரும் இப்போது அமெரிக்காவில் டெக்ஸாஸ் மாநிலத்தில் மென்பொறியாளர்களாகப் பணியாற்றி வருகின்றனர் !

 

குழந்தைகள்: (02) வித்யா:

திரு.கனகராசன் – சுமதி இணையருக்கு இரண்டாவது பெண் குழந்தை, 1999 – ஆம் ஆண்டு, சூலை மாதம், 10 ஆம் நாள் (10-07-1999) பிறந்தது. இக்குழந்தைக்கு வித்யா என்று பெயரிட்டு வளர்த்து வந்தனர். வித்யா வளர்ந்து, நன்கு படித்து, அறிவியலில் வாலைப் பட்டமும் (B.Sc.) வணிக மேலாண்மையியலில் மேதைப் பட்டமும் (M.B.A) பெற்று, தந்தையின்  கடின உழைப்புக்கு விடையளித்தார். இவர் 2025 – ஆம் ஆண்டு, மே மாதம், 28 – ஆம் நாள் (28-05-2025) பஞ்சநதிக்குளம் நடுச்சேத்தி, திரு ஆர்,அசோகன் – தனலட்சுமி இணையரின் மகன் திரு A.மணிகண்டன் B.E., என்பவரைக் கரம் பிடித்து தன் வாழ்க்கைத் துணைவராக வரித்துக் கொண்டார். இருவரும் இப்போது சென்னை புழுதி வாக்கத்தில் வாழ்ந்து வருகின்றனர். இருவருமே மென்பொருள் பொறியாளர்களாகப் பணியாற்றி வருகின்றனர் !

 

உற்றார் உறவினர் மறைவு:

திரு.கனகராசன் தனது நெருங்கிய உறவில் சில இழப்புகளையும் சந்திக்க வேண்டி வந்தது.

 

(01)  இவரது தாய்மாமாவின்  மகனான திரு மு.கருணாநிதி 2004 – ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம், 29 -ஆம் நாள்  (29—09-2004) யாரும் எதிர்பாரா வேளையில் இறப்பைத் தழுவினார்.

 

(02)  இவரது தாய்மாமா K.P.M எனப்படும் திரு க.பி. முருகையாத் தேவர் 2007 – ஆம் ஆண்டு,  ஏப்பிரல்  மாதம்,  20 – ஆம்  நாள்    (20-04-2007)  அகவை முதிர்வினால்   காலமானார்.)

 

(03)  தேவூர் மாமா திரு.சி.பண்டரி நாதன் 2007 – ஆம் ஆண்டு, ஆகஸ்டு மாதம், 06- ஆம் நாள் (06-08-2007) தனது 80 – ஆவது வயதில் காலமானார்.

 

(04) இவரது தாய் மாமா மனைவியான திருமதி செல்லமணி அம்மையார் 2008 – ஆம் ஆண்டு, சூன் மாதம், 29-ஆம் நாள்  (29-06-2008) அகவை முதிர்வினால் காலமானார்.  

 

(05) தேவூர் அக்காள் திருமதி சிந்தாமணி அவர்கள் 2015 – ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம், 08 – ஆம் நாள் (08-09-2015)  தனது 75 -ஆவது அகவையில் காலமானார். 

 

(06)  தாய் மாமா மகனான ஆசிரியர் மு.குமரப்பா 2019 -ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம், 24 -ஆம் நாள்.  (24-02-2019)  யாரும் எதிர்பாரா நிலையில் திடீரென்று காலமானார்.

 

(07)  இன்னொரு தாய்மாமாவும், மாமனாருமான K.P.K எனப்படும் திரு. க.பி.கந்தசாமி 2021 -ஆம் ஆண்டு, மே மாதம், 31 – ஆம் நாள் (31-05-2021) அன்று, தனது 88- ஆம் அகவையில் (08-09-1933 - 31-05-2021)  வயது முதிர்வின் கரணமாகக்  காலமானார்.

 

(08)  தாயார் திருமதி பஞ்சரத்தினம் அம்மையார் 2024 ஆம் ஆண்டு, சனவரி மாதம், 04 – அம் நாள் தனது 97 -ஆம் அகவையில் காலமானார்.

 

முயற்சி திருவினையாக்கியது:

தொழிற்கல்வி என்னும் இலக்கு நோக்கிய பயணத்திற்கு திரு கனகராசனுக்கு நான் வழிகாட்டினேன். அவரைப் போல் ஏராளமானவர்களுக்கு வழிகாட்டி இருக்கிறேன். ஆனால் திரு கனகராசனைப் போல் விடாப்பிபிடியான உறுதியுடன் வாழ்க்கையில் முன்னேறியவர்கள் 10 விழுக்காடு அளவுக்கே இருக்கும். தனது இரண்டு மகள்களையும் நிரம்பப் படிக்கவைத்து உயர்ந்த இடத்தில் உட்கார வைத்து அழகு பார்த்தது, இருவரையும் நல்ல இடங்களில் திருமணம் செய்து கொடுத்திருப்பது, தனக்கெனச் சொந்தமாகப் பொன்னேரியில் வீடுகட்டி அதில் வாழ்ந்து வருவது எல்லாம் அவரது உழைப்புக்கு அடையாளம். அதைக் கண்டு மற்றவர்களைப் போல் நானும் பெருமைப்படுகிறேன் !

 

நிறைவுரை !

துன்பங்களைக் கண்டு சோர்ந்து போகாமல் கடினமாக உழைத்து, வாழ்வில் உயர்வான இடத்தை அடைந்துள்ள திரு கனகராசனை மனதார வாழ்த்துகிறேன். நல்ல உடல் நலத்துடன், இனிய வாழ்க்கையை எதிர்கொண்டு, நூறாண்டு காலம் வாழ்ந்திடுக என்று வாழ்த்துகிறென். இதைப் படிக்கும் நீங்களும் வாழ்த்துங்கள் !

 

=====================================================

கனகராசன் வாழ்க்கையின் முகாமையான 

நிகழ்வுகள் சில !

======================================================

09-12-1954: திரு கனகராசன் பிறப்பு.

00-10-1962: கடிநெல்வயல் பள்ளியில் ஒன்றாம் வகுப்பில் சேரல்.

00-06-1967:  கருப்பம்புலம் பள்ளியில் ஆறாம் வகுப்பில் சேரல்.

00-07-1970: தந்தை திரு சண்முகவேல் தேவர் மறைவு.

02-11-1970:  திரு. சதாசிவம் - மல்லிகா திருமணம் - 

00-06-1971: வேதாரணியம் பள்ளியில் 9-ஆம் வகுப்பில் சேரல்.

02-07-1972: வை.வேதரெத்தினம்- கலைச்செல்வி திருமணம்

00-03-1974: பள்ளியிறுதி வகுப்பு ( OLD S.S.L.C) தேர்ச்சி.

1975 –1976: தேவூர் மாமா உணவகத்தில் பணியாற்றல்.

00-08-1977: நாகப்பட்டினம் ஐ.டி.ஐ-யில் சேரல்

00-07-1978: ஐ.டி.ஐ. தேர்வில் தேர்ச்சி பெறல்.

09-09-1978: K.C.P.யில் பழகுநர் பயிற்சியில் சேரல்.

14-03-1980: பழகுநர் பயிற்சி நிறைவு.

00-08-1980: அம்பத்தூர் சிவானந்தா ஸ்டீல்சில் வேலைக்குச் சேரல்.

00-08-1981: அம்பத்தூர் சிவானந்தா ஸ்டீல்சைவிட்டு விலகல்.

00-09-1981: மறைமலை நகர் சதர்ண் கேஸ்டிங்சில் பணியேற்றல்.

00-02-1983: மறைமலை நகர் சதர்ண் கேஸ்டிங்ஸ் விட்டு விலகல்.

00-03-1983: அம்பத்தூர் சிவானந்தா ஸ்டீல்சில் மீண்டும் சேரல்.

00-04-1985: அம்பத்தூர் சிவானந்தா ஸ்டீல்சை விட்டு விலகல்.

00-05-1985: ஆந்திர மாநிலம் கூடூர் நெல்காஸ்டில் பணியேற்பு.

21-08-1987: திரு.கனகராசன் – சுமதி திருமணம்.

13-06-1996: மகள் இரத்தினப் பிரியா பிறப்பு.

10-07-1999: மகள் வித்யா பிறப்பு.

30-04-2001: வை.வேதரெத்தினம்  பணியிலிருந்து ஓய்வு பெறல்.

00-09-2004: ஆந்திர மாநிலம் கூடூர் நெல்காஸ்டில் பணிவிலகல்.

29-09-2004: மைத்துனர் மு.கருணாநிதி மறைவு.

00-09-2004: கும்மிடிப்பூண்டி பயொனியர் அல்லாயில் பணியேற்பு.

00-11-2006: கும்மிடிப்பூண்டி பயொனியர் அல்லாயில் பணிவிலகல்.

00-11-2006: பொன்னேரி நெல்காஸ்டில் பணியில் சேரல்.

20-04-2007: திரு.க.பி.முருகையாத் தேவர் மறைவு.

06-08-2007: மாமா சி.பண்டரிநாதன் மறைவு. (80 வயது)

29-06-2008: மாமியார் செல்லமணி அம்மையார் மறைவு

00-10-2009: பொன்னேரி நெல்காஸ்டில் பணிவிலகல்.

00-01-2010: கும்மிடிப்பூண்டி J.K.M. பெரோடெக்கில் பணியேற்பு.

00-08-2012: J.K.M. பெரோடெக்கிலிருந்து பணி ஓய்வு பெறல்.

08-09-2015: தமக்கை சிந்தாமணி பண்டரிநாதன் மறைவு.(அகவை 75)

30-09-2016: கா.இருளப்ப தேவர் (அகவை 86) மறைவு.

05-06-2018: செல்வி இரத்தினப்பிரியா –திரு.கா. மணிகண்டன் திருமணம்

24-02-2019: மைத்துனர் மு.குமரப்பா மறைவு.

31-05-2020: .மீனாட்சிசுந்தரம்  மறைவு.                                         

31-05-2021: தாய்மாமா க.பி.கந்தசாமி மறைவு.

04-01-2024: திருமதி பஞ்சரத்தினம்  (97 வயது) மறைவு.

28-05-2025: செல்வி வித்யா – திரு.அ.மணிகண்டன் திருமணம்

--------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(vedarethinam76@gmail.com)

ஆட்சியர்,

“தமிழ்நட்பு” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2057, மீனம் (பங்குனி) 24]

{07-04-2026}

----------------------------------------------------------------------------------------------------

திரு.ச.கனகராசன்

 

திரு. ச.கனகராசன்

திரு. ச.கனகராசன்



திருமதி க.சுமதி கனகராசன்

க.இரத்தினப் பிரியா கனகராசன் B.E

க.வித்யா கனகராசன் B.Sc., M.B.A.




திரு.கனகராசன் & திருமதி சுமதி இணையர்.


திரு.கனகராசன் குடும்பம்.


திரு.கா.மணிகண்டன் & திருமதி இரத்தினப்பிரியா இணையர் 


திரு.கா.மணிகண்டன் & திருமதி இரத்தினப்பிரியா இணையர் 
தம் குழந்தைகளுடன் 




திருமதி வித்யா & திரு. அ.மணிகண்டன் இணையர்.



திரு.ச.சதாசிவம்.



திருமதி மல்லிகா சதாசிவம்.




திரு. சதாசிவம் & திரு. சேரலாதன் 




திரு.ச.செயராமன்


திருமதி.பஞ்சரத்தினம்  சண்முகவேல் தேவர் 


திருமதி.பஞ்சரத்தினம்  சண்முகவேல் தேவர் 

திரு.K.P.M. @ க.பி.முருகையாத் தேவர்.

திரு.க.பி.கந்தசாமி 



திரு.சி.பண்டரிநாதன் (தேவூர்)



திருமதி சிந்தாமணி பண்டரிநாதன் (தேவூர்)



திரு.வை.வேதரெத்தினம் & கலைச்செல்வி

திரு.அ.மணிகண்டன் & திருமதி வித்யா 


திரு.அ.மணிகண்டன் & திருமதி வித்யா